தேடல்கள்
- Vinothவாழ்வு எப்பொழுது அடுத்து என்ன என்பதை தெரியாமல் நகர்ந்துகொண்டிருக்கும். நாமும் என்ன செய்ய போகிறோம் என்பதை தெரியாமலையே அதன் போக்கில் நகர்ந்துகொண்டு இருக்கிறோம். சில பல திட்டங்கள், சிந்தனைகள் என நம்முள்ளும் ஒரு தேடல் நகர்ந்துகொண்டே இருக்கிறது மரணம் வரை..
இத் தேடல்களில் ஞானமும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இறைவன் எப்பொழுதும் மறைந்தே காணப்படுகிறார், அதனால் அவரை தேடலின் மூலமாகவே அறிந்துகொள்ள முடிகிறது. ஏன் அவர் மறைந்தே இருக்க வேண்டும் ? அப்படி இருப்பதன் தாத்பரியம் என்ன ?
"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசி இருக்கும்" என வைரமுத்து ஒரு கவிதை வரைந்துள்ளார். உண்மையில் இலகுவாக கிடைக்கும் எந்த ஒன்றினது மதிப்பும் போற்றப்படுவது இல்லை, ஏன் அதன் மகத்துவம் கூட நமக்கு புரிவதில்லை, அதற்கான பக்குவம் நம்மிடம் இல்லாததே காரணமாகும்.
தேடல் என்ற ஒன்று இருக்கும் பொழுது தான் நம் மனம் பக்குவமடைகிறது. சிந்தனைகள் முதிர்ச்சி அடைகிறது. அவ்வாறு பெறப்படும் பொருளே நிலைத்து நிற்கிறது. இறைவனை பற்றிய தேடலும் அவ்வாறே.
கடவுள் என்றால் கடந்து உள் நிற்பவர் என்று பொருளாகும். அவர் இதோ இருக்கிறார் ஆனால் உள்ளே நிற்கிறார் அதாவது மறைந்து நிற்கிறார். அதனால் தான் நாம் தேடுகிறோம்.. அவரை தேடும் தேடலானது அவரை அறிந்திட தேவையான பக்குவத்தினையும் மன முதிர்ச்சியையும் தந்து தேடலின் பலனாக அவரை இதோ இருக்கிறார் என்று காட்டிவிடுகிறது.
நம் அருகில் இருக்கிறார் என்ற காரணத்தினால் கடவுளை "இதந்திரன் என்று தேவர்கள் அழைப்பதுண்டு. அனால் இதந்திரன் என்று அழைக்காமல் "இந்திரன்" என்று மறைத்தே கூறுவார்கள். தேவர்களுக்கு எதையும் மறைத்து கூறவே விருப்பம்.
வேதங்களுக்கு "மறை" என்ற பெயரும் வழங்கப்பட்டு வருகிறது அதற்கான காரணமும் இதே வழியில் வந்தது தான். வேதத்தில் பொருள்கள் மறைந்தே வெளிபடுத்தபடுகிறது. இறைவனை பற்றிய தேடல்களில் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் இருக்கிறோம் அதற்க்கு ஏற்றது போன்ற படிமுறைகளை "சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், ஞானவான்கள்" நமக்கு வகுத்து தந்துள்ளனர்.
அவையாவன சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதாகும். வேதங்கள் ஞானத்தை போதிக்கிற அதே சமயம் அவை நேரடியாக போதிப்பதில்லை ஞானத்தை நோக்கிய தேடலுக்கு உந்து சக்தியாக இருந்து அவ் ஞானத்தை நம்முள் அறிந்திட வைக்கும் ஒரு வழிகாட்டியாகவே திகழ்கிறது அதனாலையே வேதங்கள் "மறை" என்ற பெயரை பெற்று போற்றப்படுகிறது..
சத்தியங்களை அறிந்திட தேடல்கள் மிகவும் இன்றியமையாததாகும். அத்தகைய தேடல்கள் விசாலமாக்கபடவேண்டும்...