இராவணன் தமிழனா? அசுரனா?
இராமர் கம்பரால் தமிழருக்கு அறிமுகமானவரல்லர்.ஸ்ரீராம்பிரானின் வரலாற்றை சங்கத்தமிழர் நன்று அறிந்திருந்தனர். எந்த அளவு என்றால் வெகு சாதாரணமாக உவமையாகப் பயன்படுத்தும் அளவு.
ஆதாரம்-
இளஞ்சேட்சென்னி என்ற மன்னனைப் பாணர்கள் பாடிப் பரிசில் பெறுகின்றனர்.அவற்றுள் அணிகலன்களும் செல்வமும் அடங்கும். தாங்கள் பெற்ற அணிகளுள் விரலுக்குரிய மோதிரத்தைக் காதுக்கும், காதுக்குரியதை விரலுக்கும், இடையில் அணிவதைக் கழுத்துக்கும், கழுத்துக்குரியதை இடைக்குமாக இப்படி மாறி மாறி அணிந்து கொள்வது வேடிக்கை ஆகவும், நகைப்புக்கு இடமாகவும் உள்ளது. எப்படி?
கடுந்தெற ல்இராம னுடன்புணர் சீதையை
வலித்தகை யரக்கன் வௌவிய ஞான்றை
நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கன்
செம்முகப் பெருங்கிளை யுழைப்பொலிந் தாஅங்கு
அறாஅ அருநகை இனிது பெற்றிகுமே
புறநானூறு ( 378: 18-22)
(மதரணி = ஒளிரும் அணிகலன், அரக்கன் = இராவணன், வௌவிய = கவர்ந்த, பெருங்கிளை = குரங்குக் கூட்டம், இழை = அணிகலன்)
இராமனுடன் வாழ்ந்த சீதையை அரக்கன் கவர்ந்து கொண்டு வந்தான். அப்பொழுது சீதை தான் அணிந்திருந்த நகைகளை ஒவ்வொன்றாகக் கீழே போட்டாள். அவை குரங்குக் கூட்டங்களின் கையில் கிடைத்தன. அக்குரங்குகளுக்கு நகைகளை எப்படி எங்கு அணிவது எனத் தெரியவில்லை. எனவே அவை மாறி மாறி அணிந்து கொண்டன. அதுபோலச் ‘சோழன் கோயிலில்’ பரிசில் பெற்ற பாணர்கள் கூட்டமும் செய்தது எனப் புறநானூறு இராமாயணத்தில் வரும் நிகழ்வுக் குறிப்புகளை உவமையாகக் காட்டுகின்றது.
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் இதுதான், மிகத் தெளிவாக புறநானூற்றுத் தமிழன் இராவணனை அரக்கன் என்றுள்ளான்.தமிழனென்று குறிப்பிடவில்லை.
தொகுப்பு: Brihaspathyam