அடிப்படை - மின்சாரம்...
குஜராத்தில்
24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. இது பத்திரிக்கையில்
பணம் கொடுத்துப் போடப்பட்ட விளம்பரம் அல்ல. அரசியல்வாதிகளின் பிதற்றலும்
அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் 24
மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மும்முனை
மின் இணைப்பு.
2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும்மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை இந்தக் கிராமங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் இருக்கலாம் அல்லது எளிதில் மின் இணைப்பு வழங்க முடியாத பகுதியில் இருக்கலாம்.
ஒரு நாள் இரவு அகமதாபாத்தில் தங்கினேன். கடுமையான இடி, மின்னலுடன் மழை கொட்டியது. காதைப் பிளக்கும் இடி ஓசை. மரங்கள்கூடச்சாய்ந்தன. என்ன ஆச்சரியம்! அப்போதும்கூட மின்சாரம் தடைப்படவில்லை. இது மட்டுமல்ல, அங்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்கும்போது யாரும் ஸ்டெபிலைசர்களை வாங்குவதில்லை. யூ.பி.எஸ், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றுக்கு குஜராத்தில் வேலையே இல்லை.
இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் பிற தொழிலுக்கு விவசாயிகள் மாறிக்கொண்டுவரும் சூழ்நிலையில் குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு விவசாயத்தின் பரப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மாநில விவசாயிகளுக்குக் கிடைக்கும் தடையில்லாத, தரமான மின்சாரம்.
குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்த மாநிலத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தபின், மீதம் இருக்கும் உபரி மின்சாரத்தைபதினாறுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்கள். நமது வீட்டுக்கு வரும் மின்சாரம்கூட ஒரு வேளை குஜராத்திலிருந்து வந்ததாக இருக்கலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மொத்த இந்தியாவும் மின்சாரத்துக்காகத் தவம் கிடக்கும்போது, நரேந்திர மோடி அரசு மட்டும் அதிகமான, தரமான மின்சாரத்தை எப்படித் தயாரித்து வருகிறது? இது ஒரு ஒப்பற்ற தலைமையின் அடையாளம்.