Friday, January 2, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 9 – வைதீகச் சடங்குகள்

கேள்வி : எந்த வைதீகச் சடங்காக இருந்தாலும், அக்னியில் நெய்யை விட்டு ஹோமம் செய்கிறார்கள். அக்னியை வளர்த்துத்தான் பல வைதீகச் சடங்குகளும் நடக்கின்றன. இது ஏன்? அக்னிக்கு அப்படி என்ன முக்கியத்துவம்?

சோ : அக்னியை தேவதூதன் என்று சொல்லலாம். ஒரு யாகம் செய்தாலும் சரி, ஒரு ஹோமம் செய்தாலும் சரி. எல்லாவற்றையும் அக்னியில்தான் சமர்ப்பணம் செய்வோம். ஏனென்றால், ஒரு குறிப்பிட்ட தெய்வத்திற்காக ஹோமம் செய்தாலும், அந்தத் தெய்வத்திற்கு எடுத்துச் செல்வது அக்னிதான். ‘சிவார்ப்பணம்’ என்று சொன்னாலும் கூட, அதை அக்னியில்தான் அர்ப்பணம் செய்வோம். சிவனுக்காக அக்னியிடம் கொடுக்கிறோம். விஷ்ணுவின் பெயரைச் சொல்லி ஹோமம் செய்கிறோம்; அதையும் அக்னியிடம்தான் ஒப்படைப்போம். இன்னின்ன தெய்வத்திற்காக என்று சொல்லி, இன்னின்ன தெய்வத்தின் ப்ரீதிக்காக என்று சொல்லி, அக்னியிடம் ஒப்படைக்கிறோம். அக்னிதான் அந்தந்த தெய்வத்திடம் கொண்டு போய் அதைச் சேர்ப்பிக்கிறது.

அக்னியைப் பார்த்தால், எப்போதுமே அதன் ஜ்வாலை மேலேதான் போய்க் கொண்டிருக்கும். அதாவது அது மேல் உலகங்களை நோக்கிச் செல்கிறது. சாதாரணமாக எதுவாக இருந்தாலும், கீழ் நோக்கித்தான் செல்லும். ஆனால், அக்னி மட்டும் மேலே செல்லும். திருமணங்கள் நடக்கின்றன. அவையும் அக்னி சாட்சியாகத்தான் நடக்கின்றன. திருப்பதியில் போய் திருமணம் செய்கிறார்கள். அங்கு ஓதப்படுகிற மந்திரம், ‘இது திருப்பதி வெங்கடாசலபதி சாட்சியாக நடக்கிறது’ என்று சொல்வதில்லை. அங்கும் அக்னியை முன்னிட்டுத்தான் நடத்த வேண்டும்.

ஒரு வகையில் தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பாலமாகச் செயல்படுவது அக்னி என்று சொல்லலாம். இது தவிர, எந்த ஒரு வஸ்துவைக் காட்டிலும், மிகவும் தூய்மையானது அக்னி. இவையெல்லாம் அக்னியின் முக்கியத்துவத்திற்குக் காரணங்களாகின்றன.



கேள்வி : சரி. அக்னியில் ஹோமங்கள் செய்கிறார்கள். வைதீகச் சடங்குகள் செய்கிறார்கள். அது ஏன் வேஷ்டியை கச்சம் கட்டிக் கொண்டு செய்கிறார்கள்? அப்படித்தான் செய்ய வேண்டுமா? சாதாரணமாக வேஷ்டியை கட்டிக் கொண்டு செய்தால், அந்த ஹோமம், சடங்கு சரியாக நிறைவேறாதா?

பதில் : இப்போது சாதாரணமாக வேஷ்டி கட்டிக் கொண்டு செய்யக் கூடாதா என்று கேட்கலாம். பின்னர் ‘பேண்ட் போட்டுக் கொண்டு செய்யக் கூடாதா? அரைநிஜார் போட்டுக் கொண்டு செய்யக் கூடாதா? அல்லது இப்போதெல்லாம் வந்திருக்கிற முக்கால் நிஜார் போட்டுக் கொண்டு செய்யக் கூடாதா?’ என்று கேட்கலாம்.

இப்படி இந்த விஷயத்தில் பெரிய கேள்விகளை எழுப்பி மேதாவிலாசத்தைக் காண்பித்துக் கொள்கிற நாம், ஒரு வக்கீலைப் பார்த்து, ‘கறுப்புக் கோட்டுக்குப் பதில் சாதாரண கோட் போட்டுக் கொண்டு போகக் கூடாதா?’ என்று கேட்பதில்லை. ஒரு போலீஸ்காரரைப் பார்த்து ‘என்னய்யா, எப்போது பார்த்தாலும் காக்கிச் சட்டை! சகிக்கவில்லை. வேறு கலர் சட்டை போட்டுக் கொண்டு போகக் கூடாதா?’ என்று கேட்பதில்லை. பல இடங்களிலும் யூனிஃபார்ம்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பகுத்தறிவு விளக்கங்களைக் கேட்பதில்லை. வைதீகச் சடங்கை இப்படித்தான் செய்ய வேண்டும் என்றால் மட்டும், பல கேள்விகள் வருகின்றன.

சில நியமங்கள் கடைப்பிடிக்கப்பட்டால் தான் ஒரு கட்டுப்பாடு வரும். அந்த மாதிரி சில கட்டுப்பாடுகள் வைதீகச் சடங்குகளுக்காக விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று – கச்சம் கட்டிக் கொள்வது. ‘நான் எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்க மாட்டேன். என் இஷ்டப்படிதான் உடை உடுத்திக் கொள்வேன்’ என்று ஒருவன் சொன்னால், செய்கிற காரியத்தில் அவனுக்கு சிரத்தை இல்லை என்றுதான் ஆகும்.

ஒரு ஆஃபீஸுக்குப் போகிறவர் இந்த உடையில்தான் செல்ல வேண்டும் என்றால், அவர் அப்படித்தான் செல்வார். ஏனென்றால், அது வயிற்றுப் பிழைப்பு சமாச்சாரம். ஆனால், வைதீகக் காரியங்கள் அப்படி அல்ல; அதனால் இஷ்டத்திற்கு என்ன கேள்விகளை வேண்டுமானாலும் கேட்கலாம்.வைதீக காரியங்களை முறையாகச் செய்ய வேண்டுமென்றால், அதற்கான விதிமுறைகளை அனுஷ்டித்து, முறைப்படிதான் அதைச் செய்ய வேண்டும். அதிலிருந்து மாறுபட்டால், நமக்கு அக்கறை குறைவு என்றுதான் அர்த்தம்.



 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :