Monday, January 5, 2015

Keerthivasan

கட உபநிஷதத் தத்துவங்கள் - 2 - கர்மக் கொள்கையின் பயன்

உபநிஷத ஸ்லோகங்களை எழுதுவதை விட அவற்றின் கருத்துக்கள் பற்றி சொல்வதே நல்லதாக இருக்கும் என்று கருதுகிறேன்! இருப்பினும் தேவைப்படும் நேரத்தில் ஸ்லோகங்கள் வரும். இங்கு ஒன்று அல்லது பல ஸ்லோகங்களின் கருத்தை நான் விரித்து எழுத விழைகிறேன். அதனால் ஸ்லோகம் எது என்று தயவு செய்து கேட்காதீர்கள்.

உபநிஷத ஸ்லோகங்களின் கருத்துக்கள் அப்படியே படித்தாலும் கூட சமயத்தில் அவை எதைப் பற்றி சொல்கின்றன என்பது நமக்கு முழுதும் புரியாமல் போகலாம். அதையே நான் விளக்க ஆசைப்படுகிறேன். அதனால் ஸ்லோகம் எது என்று கவலைப் படாதீர்கள் இந்தத் தத்துவங்கள் முழுதுமே ஸ்லோகங்களின் கருத்தை அடியொற்றியே இருக்கும்.

ஒரு குறிப்பிட்ட சில ஸ்லோகங்களின் கருத்தைப் பல பதிவுகளில் விரித்து எழுதினால் அவை குறிக்கும் பலப் பல விஷயங்கள் நமக்குப் புரிய வரலாம். அதனாலேயே இப்படி சொல்ல விழைகிறேன். இன்னொன்று உபநிஷத ஸ்லோகத்தை எழுதி அதன் பொருள் பற்றி மட்டும் கூறுவதால் பெரும் பயனில்லை என்பதே என் கருத்து. ஏனென்றால் அதை நீங்கள் படிப்பதைக் காட்டிலும் புத்தகங்களை வாங்கிப் படித்து விடலாம். அதனாலேயே உபநிஷதக் கருத்துக்களை புரிந்து கொள்ள முடியுமளவு எளிமைப்படுத்தித் தர விழைகிறேன்.

முதலில் ஒரு மனித உயிரின் பயணம் பற்றிக் காண்போம்! மனிதன் ஒழுக்க நெறியுடனும் வாழ்க்கையில் ஒரு குறிக்கோளுடனும் ஏனோ தானோ என்று வாழாமல் இருப்பதற்கே நம் ஹிந்து தர்மத்தில் பலப்பல தத்துவங்கள் உரைக்கப் பட்டுள்ளன என்றால் அது மிகையாகாது! அதில் முக்கியமானது கர்மா தத்துவம்! மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் கர்ம வினைகளே அவனைத் தொடர்ந்து மறுபிறவியில் அனுபவிக்கும் வினைகளுக்குக் காரணமாகும் என்பது கர்ம விதிகளில் ஒன்று! இதுவே மனிதனை தீவினைகளை செய்யாதிருக்கும் முகமாக வழிநடத்துகிறது என்றும் கொள்ளலாம்!!

இதை அடிப்படையாகக் கொண்டே நாம் சில விஷயங்களுக்கும் நியாயம் கற்பிக்க முடியும்! சிலர் நாத்திகர்கள் கூறுவார்கள் கடவுள் என்று ஒருவர் இருப்பது உண்மையானால் ஏன் இத்தனை ஏற்றத்தாழ்வுகளை மனிதனுக்கு வைத்து படைக்கிறார் என்று. இன்னமும் சிலர் கடவுளுக்கு மனமிருந்தால் பல குழந்தைகளை பிறவியிலேயே குருடாய், ஊமையாய், இன்னமும் கைகால் விளங்காமலே ஏன் படைக்க வேண்டும்? அவை என்ன பாவம் செய்தன என்றும் கேட்கலாம். இவற்றுக்கு சரியான விளக்கம் கர்மா கொள்கையில் உள்ளது! அந்த விளக்கம் மூன்று வகையான தன்மைகளுக்கு சரியான சமாதான விளக்கமாக விளங்குவது இன்னமும் சிறப்பு .

குழந்தை எந்தப் பாவமும் செய்யவில்லை! ஆனால் அது முற்பிறவியில் மனிதனாக இருக்கும் போது செய்த வினைகளின் அடிப்படையில்தான் இந்தப் பிறவியில் அதன் படைப்பு அமைகிறது. அதனாலேயே முற்பிறவி வினைகளின் காரணமாகவே இப்பிறவியில் அதன் படைப்பு இப்படி அமைகிறது என்பது ஒரு சிறந்த முதல்  விளக்கம்.

இதன் காரணமாகவே தான் மனிதனுடைய வாழ்வில் ஏற்றத்தாழ்வுகள் உண்டாகின்றன என்பது இந்தக் கொள்கையால் கிடைக்கும் இரண்டாவது விளக்கம்.

இன்னமும் பலர் இப்பிறவியிலே பலப் பல அக்கிரமங்களை செய்தாலுமே கூட அதற்கேற்ற கெடுபலன்கள் எதுவுமின்றி நன்றாகவே வாழ்கின்றனர் என்பது மனிதனுக்கு தர்மம், கடவுள் நம்பிக்கையை இழக்க வைக்கின்றன. ஆனால் இந்தக் கொள்கையின் மூலம் அவ்வாறு உள்ள மனிதன் அடுத்த பிறவியில் அதன் பலனைப் பெறுவான் என்று சொல்லப்படும் போது மனிதன் அதை நினைத்து சமாதானம் அடைகிறான். அது மட்டுமல்ல இப்பிறவியிலேயே யார் எந்த தீய செயல்களை செய்தாலும் கூட தான் அதனால் மனம்மாறாது நற்செயல்களை மட்டுமே புரிய வேண்டும் என்கிற ஒரு எண்ணமும் அவனுக்கு உண்டாகிறது. இதுவே  இந்தக் கொள்கையின் மூன்றாவது விளக்கம் என்றும் கொள்ளலாம்.

எது எப்படி இருந்தாலும் இந்தக் கொள்கையால் மட்டுமே மனிதன் உலகில் ஓரளவாவது நல்லவனாக இருக்கிறான் வாழ்கிறான் செயல்படுகிறான் என்பது திண்ணம்.

ஆக்கம்: துரோணாச்சாரியார்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :