இதுதான் இந்துமதம் – 03
இந்து மதத்தின் கோட்பாடுதான் என்ன ?
ஆத்ம ஞானமே இந்து மதத்தின் இலக்கு. அதை நோக்கிய பயணம் பல வகையில் மாறுபடுகிறது. இந்து மதத்தின் கோட்பாடுகள் யோகம், வைஷேஷிகம், மீமாம்சம், நியாயம், சாங்கியம், வேதாந்தம் என பல வகையில் பயனிக்கிறது. "நாசதிய சுக்தம்" எனப்படும் நாஸ்திக வாதத்தை கூட வேதங்கள் வெளிப்படுத்துகின்றன. இவற்றை குறித்து எளிய முறையில் பின் வரும் பகுதிகளில் விளக்குகிறேன்.
வேதங்களே இந்து மதத்தின் ஆதாரமாக திகழ்கின்றன. வேதங்கள் வெளிப்படுத்தும் கோட்பாடுகளே இந்து மதத்தின் அனைத்து சித்தாந்தங்களுக்கும் (நாஸ்திகம் உட்பட) அஸ்திவாரமாக இருக்கிறது.
சரி, வேதங்கள் எப்படி, யாரால் உருவாக்கப்பட்டது ?
வேதங்கள் தனி ஒருவரால் கொடுக்கப்பட்டதல்ல, எழுதப்பட்டதல்ல. ரிஷிகள் எனப்படும் ஞானிகள் தங்கள் தவ வலிமையால் ஆரம்பமும், முடிவும் இல்லாத பிரபஞ்ச ரகசியங்களை வெளிப்படுத்துகிறார்கள். வேதம் அவர்களை ஒரு ஊடகமாக கொண்டு வெளிப்படுகிறதே தவிர, வேதம் யாராலும் உருவாக்கப்பட்டதல்ல. வேதமும் பரம்பொருளும் பிரிக்க முடியாதவையாகவே கருதப்படுகிறது. வேதங்களை வியாசர் எனும் மகரிஷி தொகுத்தார். அதை நான்காக பிரித்தார். வியாசம் என்றால் "தொகுத்தவர்" என்று பொருள்படும்.
வேதங்கள் உரைநடையாகவோ, கவிதையாகவோ வெளிப்படுத்தப்படவில்லை. அவை மந்திரங்களாக உள்ளன. தமிழில் வேதங்களை "மறை" என்று கூறுவார்கள். அதாவது சாமான்யர்களுக்கு மறைந்து இருப்பவை என பொருள் கொள்ளலாம். ஆதி சமஸ்க்ருதத்தில் வேதங்கள் காணப்பட்டாலும், வெறும் மொழி அறிவால் ஒருவரால் வேதங்களை புரிந்துக் கொள்ளவே இயலாது. சமஸ்க்ருதத்தில் மிகச் சிறந்த மேதையாக ஒருவர் இருப்பதால் அவர்கள் வேதங்களை புரிந்துக் கொண்டு விட முடியாது. ஆன்மீக வளர்ச்சி இல்லாத "மேக்ஸ் முல்லர்" போன்ற ஐரோப்பிய ஆய்வாளர்கள் வேதங்களை மேம்போக்காக மொழிப் பெயர்த்தது இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.
ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் வேதங்கள் ஒவ்வொன்றையும் மீண்டும் நான்காக பிரிக்கலாம். 1) சம்ஹிதைகள் எனப்படும் மந்திரங்கள் 2) ஆரன்யகம் எனப்படும் சடங்குகள், சம்பிரதாயங்கள் 3) பிராமணங்கள் எனப்படும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் குறித்த வர்னனைகள், விளக்கங்கள் 4) வேதாந்தம் எனப்படும் ஆன்மீக, தத்துவ விளக்கங்கள்
ஒருவரின் ஆன்மீக அனுபவத்தை பொறுத்தே வேதங்களின் உட்கருத்து வெளிப்படுகிறது. வேத ரகசியங்கள் வெறும் காரண அறிவால் புரிந்துக் கொள்ளக் கூடியது அல்ல.
நல்லது. இந்த மந்திரங்கள் என சொல்கிறார்களே அது என்ன ? அதை குறித்து விரிவாக பார்ப்போம்.
– Englightened Master