இதுதான் இந்துமதம் – 02
இந்து மதம் என்னவாக இருந்தது ??
பலதரப்பட்ட நம்பிக்கைகள், பலதரப்பட்ட சித்தாந்தங்கள், பலதரப்பட்ட சடங்குகள், பலதரப்பட்ட சமூகங்களை கொண்ட ஒரு வலைபின்னலாக அது இருந்தது. என் சித்தாந்தம்தான் இந்துமதம், என் சமூகம்தான் இந்துக்கள் என சொல்ல இயலாத வகையில் அது அனைவரையும், அனைத்தையும் ஆட்கொண்டு இருந்தது. சுருங்க சொன்னால் சூரிய ஒளியை எப்படி எவராலும் தனது மட்டுமே என சொந்தம் கொண்டாட இயலாதோ, அது போல் இந்து மதத்தையும் எவராலும் சொந்தம் கொண்டாட இயலாது.
எந்த தனியொரு இறை தூதரும் அதை உருவாக்கவில்லை. எந்த தனியொரு புனித புத்தகத்திலும் அது புதைந்துவிடவில்லை. எந்த தனியொரு சரித்திர நிகழ்வும் அதை தொடங்கி வைக்கவில்லை. அது ஆதி இல்லாதது. ஆதி என்பது இல்லாத காரணத்தால் அழிவு என்றும் ஒன்று இல்லாதது. அனைவரையும் தன்னகத்தே ஆட்கொள்ளக் கூடியது. இந்த பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் அழிக்க முடியாதது.
இந்து மதத்தை ஒரு மிகப்பெரும் மரமாக கொள்ளலாம். வேதங்கள், உபநிஷத்துக்கள், இதிகாச புராணங்கள் ஆகியவை அதன் அடிமரமாக இருக்கிறது. சைவம், வைணவம், சாக்தம், ஸ்மார்த்தம் என அதற்கு பல கிளைகள். த்வைதம், அத்வைதம், விஷிஷ்டாத்வைதம் என பலவிதமான சித்தாந்தங்கள் அந்த மரத்தில் பூக்கும் தனித்துவம் மிக்க மலர்கள். பல நூறு சாதி சமூகங்கள், அதில் வசிக்கும் பலவிதமான பறவைகள். ஆத்ம அனுபவமே அந்த மரம் தரும் கனி. வேதாந்தம் போதிக்கும் தர்மமே அதன் ஆணிவேராக இருக்கிறது. ஆலயங்களும், ஆன்மீக சிந்தனைகளும், ஆத்ம விசாரமும் (தேடல்) அதற்கு நீராக அமைகிறது. ரிஷிகள், ஞானிகள், மகான்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் என பலர் அதற்கு உரம் இடுகிறார்கள். அதை சுற்றி களைகள் எனும் அதர்மம் தலை தூக்கி அம்மரத்தை வலுவிழக்க செய்ய முனையும் போதெல்லாம் இறைவன் எனும் விவசாயி அதை காக்க அவதரிக்கிறான்.
இந்து மதத்தின் அடிப்படை கோட்பாடுதான் என்ன ? அடுத்த பகுதியில் பார்ப்போம்.
– Englightened Master