இதுதான் இந்துமதம் – 01
இந்து மதம் !! ஆதியில் என்ன பெயரில் இது அழைக்கப்பட்டது ? எங்கே தொடங்கியது இது ? யார் தொடங்கினார்கள் இதை ? எதை சார்ந்து இது இருக்கிறது ?
முதலில் பெயர்கள் என்பது எதற்காக ?
ஒவ்வொன்றையும் தனித்தனியாக அடையாளப் படுத்தி கொள்ள !!
சரி, உங்கள் பள்ளியில் அல்லது கல்லூரியில் அல்லது அலுவலகத்தில் ராமசாமி என்பவர் உள்ளார். பலர் உட்கார்ந்திருக்கும் போது "ராமசாமி" என்று நீங்கள் கூப்பிட்டதும் அவர் திரும்பி பார்க்கிறார். ராமசாமி என்பது அவரின் அடையாளம். இப்போது புதியதாய் வேறு ஒரு ராமசாமி வந்து விட்டார். இனிமேல் நீங்கள் ராமசாமி என்றால் இருவரும் திரும்பி பார்ப்பார்கள். ஆகையால் "பழைய ராமசாமி" "புது ராமசாமி" என்று அடையாளப்படுத்திக் கொள்ளலாம். அல்லது குட்டை, நெட்டை, கருப்பு, சிவப்பு என்று ஏதேனும் ஒரு குறிப்பை ராமசாமிக்கு முன் போட்டுக் கொள்ளலாம். ஆக மொத்தம் எப்படியாவது ஒரு அடையாளத்தை நாம் நிலை நிறுத்தியாக வேண்டும். ஒருமை பண்மையாக மாறுகையில் அடையாளம் அவசியப்படுகிறது.
இப்போது நீங்கள் இந்த உலகின் ஒரே மனிதன் என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பெயர் தேவையா ? நிச்சயம் இல்லை அல்லவா ? உங்கள் பெயரை சொல்லி அடையாளம் கொள்ள யாருமே இல்லாத போது ஒரு பெயருக்கு என்ன அவசியம் ?
அப்படித்தான் இன்று இந்து மதம் என்று அழைக்கப்படும் நம் "தர்ம மார்கத்திற்கு" பெயருக்கான அவசியமே இல்லாமல் இருந்தது. மதங்கள் என்கிற பெயரில் எதுவுமே முளைவிடாமல் இருந்த போது அதற்கு பெயரே தேவை இல்லாமல் இருந்தது.
கடந்த சில நூற்றாண்டுகளில் ஆப்ரகாமிய மதங்கள் இரண்டும் இந்தியாவில் ஊடுறுவிய பிறகுதான் "இந்துமதம்" என்கிற ஒரு அடையாளப் பெயர் அதற்கு உருபெற்றது. அது வரை சனாதனம் என்கிற எல்லையற்ற தன்மையை குறிக்கும் ஒரு தர்மமாகவே அது திகழ்ந்து வந்தது.
இந்து மதம் என்பது நாம் சூட்டிக் கொண்டது அல்ல. அந்நியர்கள் நம் தேசத்தின் ஒவ்வொரு அணுவிலும் பரவிக் கிடந்த தர்ம நெறிமுறைகளை, பாரம்பரியமான பழக்க வழக்கங்களை, சித்தாந்தங்கள் மற்றும் கோட்பாடுகளை ஒட்டு மொத்தமாக அடையாளப்படுத்திக் கொள்ள வைத்த பெயர் அது.
இப்படித்தான் காலங்களை கடந்து நிற்கும் எல்லையற்ற தர்மத்தை சமீப காலங்களில் "இந்து மதம்" என்றே அழைக்கத் தொடங்கினோம்.
இந்து மதம் எனும் அடையாளம் தோன்றுவதற்கு முன் அது என்னவாக எல்லாம் இருந்தது ? அதன் ஆணி வேராக இருப்பது எது ? அடுத்த பதிவில் பார்ப்போம்.
– Englightened Master