ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 18
– Englightened Master
எட்டாம் நூற்றாண்டின் உமாயத் பேரரசின் கலீஃபாக, "வலீத் பின் அப்துல் மலீக்" ( Walid Bin Abdul Malik) இருந்தார். முஸ்லீம் படையின் தாக்குதலில் இருந்து சில புரட்சி படையினர் தப்பித்து பாரதத்தின் சிந்து பகுதியில் தஞ்சம் புகுந்தனர். இது உமாயத் பேரரசின் பார்வையை சிந்து பிரதேசம் நோக்கி திருப்பியது. (முஸ்லீம் படையின் கப்பல்கள் சிந்து பிரதேசத்தில் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதாகவும், அதனால் அதை தடுக்க படை அனுப்பியதாகவும் பாகிஸ்தானிய சரித்திரம் கூறுகிறது. கடற் கொள்ளையர்கள் சிலர் முஸ்லீம் பெண்களை கைது செய்ததாகவும், அவர்களை மீட்க உமாயத் கவர்னர் படை அனுப்பியதாகவும் மேலும் சில பாகிஸ்தானிய/முஸ்லீம் சரித்திரங்கள் கூறுகின்றன)
சிந்து பிரதேசத்தை அச்சமயம் ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட "புஷ்கரண பிராமண" வம்சத்தை சேர்ந்த அரசனான "ராஜா தஹீர் சென்" ஆண்டு வந்தார். முஸ்லீம் படைகள் கைபர் கணவாய் வழியாக வந்து சிந்து பிரதேசத்தை பல முறை கைப்பற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியை தழுவியது. முதலில் "உபைதுல்லா பின் பின்ஹான்" என்பவனது தலைமையில் ஒரு படையை அனுப்புகிறார் வலீத். அது சிந்து ராஜா தஹீரால் விரட்டி அடிக்கப்படுகிறது. மேலும் ஒரு முயற்சியும் ராஜா தஹீரின் வீரமிக்க படையால் தோல்வியை தழுவுகிறது. இறுதியில் உமயத் பேரரசின் டெமாஸ்கஸ் (சிரியா) கவர்னராக இருந்த "ஹஜாஜ் பின் யூசஃப்" தன்னுடைய உறவினனான "முகம்மது பின் காசிம்" தலைமையில் ஆறாயிரம் குதிரை வீரர்கள் மற்றும் பல ஆயிரம் ஒட்டகங்களை கொண்ட ஒரு பெரும் படையை சிந்து பிரதேசத்தை நோக்கி அனுப்பி வைக்கிறான்.
பதினேழு வயதே ஆன காசிம் மிகச்சிறந்த வீரன், மற்றும் மதிநுட்பத்தோடு போரிடக் கூடியவன். ஏற்கனவே பாரசீகர்களோடு பல போர்களை திறம்பட நடத்தியவன். அவன் இம்முறை தாக்குதலை தெளிவாக திட்டமிட்டு பலுசிஸ்தான் வழியாக செல்லுகிறான். முஸ்லீம் படை 4ம் நூற்றாண்டில் சீனாவில் பயன்படுத்தப்பட்ட பெரிய கற்களை எறிய கூடிய இயந்திரங்களை தங்கள் வசம் கொண்டிருந்தது. அந்த இயந்திரங்களுக்கு சில மாறுதல்களை செய்து அவற்றின் மூலம் கோட்டைகளை தகர்க்க கூடிய திறனையும் வளர்த்துக் கொண்டிருந்தது. பாரசீகர்கள் மற்றும் பைஜான்டைன் பேரரசுடன் மோதுகையில் இந்த இயந்திரங்கள் மேம்படுத்தப்பட்டன. அதில் ஒன்றுதான் மிஞ்சனிக் (minjanique) எனும் இயந்திரம். நூறு கிலோ எடை கொண்ட கற்களை ஆயிரம் அடிக்கு வீசும் அளவிற்கு திறன் கொண்ட இந்த இயந்திரத்தை தன் வசம் கொண்டிருந்தான் காசிம்.
சிந்தி மொழியில் காஜி இஸ்மாயில் என்றவரால் இயற்றப்பட்ட "சச் நாமா" (Chach Nama), மற்றும் அரபியில் தரீக் இ சிந்த் என மொழிபெயர்க்கப்பட்ட சரித்திர புத்தகங்கள் காசிமின் படையெடுப்பு குறித்து விரிவாக கூறுகின்றன.
புறநகர் பகுதிகளை முதலில் கைப்பற்றும் முகம்மது பின் காசிம் அங்குள்ள ஜாட், மெட்ஸ் மற்றும் பூட்டோ (Jat, Meds and Bhutto) பழங்குடியினரிடம் ஜிகாதிய யுக்திகளை பயன்படுத்துகிறான். முஸ்லீம் படை அரேபியா மற்றும் பிற பகுதிகளில் செய்தது போல், "மதம் மாறுங்கள் அல்லது மடியுங்கள்" என்பதே முன் நிறுத்தப் படுகிறது. மேலும் தன் எதிரிகளின் ஒரு சாராரிடம் பொன்னும் பொருளும், பல சலுகைகளும் தருவதாக கூறி ஒப்பந்தம் பேசி ஒவ்வொரு பகுதியாக தன் ஆளுமைக்கு கொண்டு வருகிறான். இப்படி கிட்டத்தட்ட 60 சதவீதம், ஒப்பந்தங்கள் மூலமாகவே சிந்து பகுதிகள் பலவற்றை கைப்பற்றி தன் படையின் பலத்தை வலுவாக்குகிறான் முகம்மது பின் காசிம்.
அடுத்து பஞ்சகோர் என்கிற நகரத்தையும் அதன் பின் அர்மபெல் நகரத்தையும் கைப்பற்றிய காசிம், மிக முக்கியம் வாய்ந்த தெபல் (Debal) துறைமுகத்தை தாக்குகிறான். ஒரு மாதப் போருக்கு பின் முகம்மது பின் காசிமின் படை தெபல் நகரத்தை கைப்பற்றுகிறது. சிந்து பகுதியை சேர்ந்த படை வீரர்கள் மிக கொடுமையான முறையில் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் அடிமைகளாக பிடிக்கப்படுகிறார்கள். தெபலில் உள்ள பழமையான கோவில் "முகம்மது நபி" அவர்கள் ஆறாம் நூற்றாண்டில் பாகன் கோவில்களை மெக்காவில் அழித்தது போல் அவர் வழியில் சுக்குநூறாக்கப்படுகிறது. கோவிலின் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டு படை வீரர்களுக்கு இடையே பங்கு போடப்படுகின்றன. அழிக்கப்பட்ட கோவிலின் இடத்தில் பெரும் மசூதிகள் கட்டப்படுகிறது. இன்றைய பாகிஸ்தானின், கராச்சி எனும் நகரம் அங்கு உருபெறுகிறது.