ஆதியும் அந்தமும் இல்லாத பராபரம்
பேதமது ஆகிப் புணரும் பராபரை
என்று திருமந்திரம் சொல்கிறது.
வெட்ட வெளியே மெய்யென்று
இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி குதம்பாய்
என்று இந்த வெட்ட வெளியாகிய
பிரபஞ்சத்தைக் குதம்பைச் சித்தர் குறிப்பிடுகிறார்.
உலகம் தோன்றி, அதில் உயிரினங்கள்
தோன்றி, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் பேரில் ஆதி முதல்
மனிதன் தோன்றி, மானுட வர்கம் பெருகி,
மனிதன் சிந்திக்க கற்றுகொண்ட காலம்
முதலாக மனித அறிவு வளர்ந்து வந்து இருக்கிறது. இந்த அறிவின் வளர்ச்சி காரணமாகவே; இன்றய அறிவியல்
புதுமைகளும், கலைப்புதுமைகளும்,
இலக்கிய இலக்கணங்களும் வளர்ந்து நின்று
மானுட வாழ்வை மிளிரச் செய்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்துக்கும்
அடிப்படை மனிதன் பெற்றுக் கொண்ட அறிவின் முதிர்ச்சியே ஆகும்.
அறிவு என்பது அறிந்து வைத்துக் கொள்ளுவது என பொருள்படுகிறது. அறிந்து கொள்ளுவதாகிய
இந்த அறிவு, ஞானம் என்ற சொல்லாலும் குறிக்கப்படுகிறது. இந்த அறிவாகிய ஞானம், இரண்டு வகையாக சான்றோர்களால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. ஒன்று
விஞ்ஞானம் மற்றது மெய்ஞானம்.
விஞ்ஞானம் = விக்ன+ஞானம் என
பிரிக்கலாம். ’விக்ன’ என்றால் “உடைந்த”, “சிதைந்த” என்று பொருள். விஞ்ஞானம் என்றால் உடைத்து பார்க்கின்ற அறிவு, சிதைத்து பார்க்கின்ற
அறிவு என பொருள். இந்த விஞ்ஞானம்
விஞ்ஞானிகளால் மூன்று வகையாக்
பகுக்கப்படுகிறது. அவை பௌதீகம், ரசாயனம், உயிரியல் என்பனவாகும்.
பொருட்களை உடைத்தும், பகுத்தும், சிதைத்தும் செய்து
பார்க்கின்ற அறிவு பௌதீக இயலைப்பற்றிய அறிவு.
பொருட்களை உடைத்தும், சிதைத்தும், எரித்தும், காய்ச்சியும், ஆவியாக்கியும், ஒன்றை இன்னொன்றோடு கலந்தும் ஆய்வு செய்து பார்க்கின்ற அறிவு ரசாயன
இயலைப்பற்றிய அறிவு.
உயிரினங்களின் உடம்புகளின் இயக்க
நுட்பங்களைக் கூர்ந்து கவனித்தும், அறுத்து கவனித்தும் அவற்றின் இயக்க பேதங்களின்பால் இருப்பதாகிய இயற்கை நுட்பங்களை அறிந்து தெளிதல் உயிரியல் பற்றிய அறிவாகும்.
“மெய்” என்றால் உடம்பு,
உண்மை என்று பொருள். மெய்ஞானம் என்றால்
உடம்பைப்பற்றிய அறிவு என்பது நேர்பொருள். இதுவல்லாது மெய் என்ற சொல்லுக்கு “உண்மை” என்று பொருள் கொண்டு,
உண்மையான் அறிவு என்று பொருள்
கொள்ளலாம்.
விஞ்ஞானம் எவ்வாறு மூன்று
வகையாகப் பகுத்து பார்க்கப்பட்டதோ அவ்வாறே மெய்ஞ்ஞானமும் மூன்று வகையாக்ப்
பகுத்துப் பார்க்கபடுகிறது. அவை உடம்பு,
உயிர்,
மனம் என்பனவாகும்.
உடம்பு எதனால் இயங்குகிறது? இந்த உடம்புக்கு நோய், நொடிகள் எவ்வாறு
வருகின்றன? வந்தபின் மருந்து என்ற ஒன்றை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, நோய் நொடிகளே வாராமல்
தடுத்துக் கொள்ள என்ன வழி? இந்த உடம்புக்கு இளமையும் முதுமையும் எதனால் வருகின்றன? இவற்றையெல்லாம்
ஆய்ந்து அறிவது உடம்பைப் பற்றிய அறிவு.
உயிர் என்பது என்ன? இது மனித உடம்பில் எங்கே இருக்கிறது?
மனிதனின் சகலமான இயக்கங்களுக்கும்
இதுதான் ஜீவன் என்ற ஆதாரமா? உயிர் போனபின் உடல் அழிந்து போகிறது. உயிர் என்ன ஆகிறது? உயிரின் நிலை மரணத்திற்குப் பின்னால் என்ன? மரணம் என்பது
மானுடனின் சகலமான இயக்கங்களுக்கும் ஒரு இறுதி முடிவா? இந்த மரணத்தை மனிதன்
வென்று விட முடியாதா? முடியுமானால் அதற்கு என்ன வழி?
முடியாது என்றால் மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்வு இருக்கிறதா?
இவைகளைப் பற்றி ஆய்ந்த அறிவு உயிரைப்
பற்றிய அறிவாக ஆயிற்று. இந்த அறிவே ஆன்மாவின் துலக்கமாயிற்று.
மனம் என்பது என்ன? இது எங்கே இருக்கிறது? இது ஏன் ஒரு நொடி கூட
சும்மா இராமல் அலை பாய்ந்துகொண்டே இருக்கிறது?
இப்படி அலைகின்ற மனதைக் கொஞ்ச நேரமாவது சிந்தனைகளே இல்லாதபடி சும்மா வைத்திருக்க முடியாதா? அப்படிச் சிந்தனைகளே இல்லாதபடி மனதை அசைவற்ற நிலைக்கு கொண்டு செல்வதால் மனிதன்
பெறுகின்ற பயன் என்ன? இப்படி மனதை ஆய்ந்து அறிகின்ற அறிவே மனதைப் பற்றிய அறிவு.
இப்படி மூவகைப் பகுப்புகளின்
கீழே விவரிக்கப்படும் விஞ்ஞானத்திற்கும்,
மெய்ஞ்ஞானத்திற்கும் குறிப்பிடும்படியான
ஒற்றுமைகள் ஏதும் இல்லை. ஆனால்
விஞ்ஞானமும், மெய்ஞானமும் நிரம்ப
வேறுபாடுகள் கொண்டது.
விஞ்ஞானம் தனது சோதனைக் கூடத்துக்குள்
சிக்குகின்ற பொருட்களை மட்டும் ஆய்வு செய்ய முடியும்.
மெய்ஞ்ஞானம்; கண்ணால்
பார்க்கமுடியாத, கைகளால் தீண்டமுடியாத எந்த சூட்சமத்தையும் ஆய்வு செய்ய வல்லது. விஞ்ஞானதிற்கு சோதனைகான புறக்கருவிகள்
தேவை. மெய்ஞானத்திற்கு கருவிகள் ஏதும்
வேண்டாம். அக கருவியான மனமே அதன் கருவி. விஞ்ஞானத்தின் கோட்பாடுகள், முடிவுகள், விஞ்ஞானிக்கு
விஞ்ஞானி, நாட்டுக்கு நாடு,
காலத்திற்கு காலம் மாறகூடியவை.
ஆக்கம்: கிருஷ்ண பரமாத்மா