Saturday, May 23, 2015

Keerthivasan

கட உபநிஷதத் தத்துவங்கள் - 5 - மதியும் விதியும்

கட உபநிஷதத் தத்துவங்கள் - 5 - மதியும் விதியும்



விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லும்போதே இரண்டும் வெவ்வேறு தன்மைகளுல்லவை என்பதும் நமக்குப் புரிந்து விடும். இதில் விதி என்பது யாராலோ முற்பிறவியின் வினைப்பயனாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது என்றால் மதி என்பது என்ன என்பதைக் காண்போம்.

            மதி என்பது நம்முடைய ‘புத்தி’ ஆகும். இந்த இடத்தில் பல நண்பர்கள் புத்தியையும் மனதையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள். அதைக் குழப்பமில்லாமல் விளக்க முயல்கிறேன். மனம் என்பது உணர்வது. காட்டுப் பாதையில் நீங்கள் செல்லும் போது திடீரென எதிரில் ஒரு புலியைக் கண்டால் அது புலி என்பதையும் அது நம்மைக் கொன்று விடக் கூடும் என்பதையும் உணர்வது மனம். புத்தி என்பது உடனே குறைந்த நேரத்தில் அந்தப் புலியிடம் இருந்து எந்த வழியில் நம்மைக் காத்துக் கொள்ளலாம் என்பதை சிந்தித்து அதற்கேற்ப நம்மை நடக்க வைப்பது. இங்கு மனம் முக்கியத்துவம் உடையதல்ல. மனம் ஒரு குரங்கு என்பதைக் கேட்டிருப்போம். அதனால்தான் ஒரு நிலையாக இல்லாமல் அங்குமிங்கும் நம்முடைய மனம் அலைபாய்கிறது. இதையே வேறொரு வழியில் விளக்க முற்படுகிறேன்.

       புதியதாக ஒருவன் தியானம் பழகுகிறான் என்று கொள்ளுங்கள். கண்களை மூடி இரண்டு விழிகளையும் உட்புறமாகக் கொண்டு வந்து நெற்றி நடுவிலிருப்பதைக் காண முயல்கிறான். ஆரம்பத்தில் அங்கு ஏதோ ஒரு சிறு ஒளி இருப்பது போலத் தோன்றலாம். உண்மையில் தியானம் இடைஞ்சலில்லாமல் செய்யப்பட்டால் அந்த ஒளி நாளாக நாளாக வெளிச்சம் கூடிக் கொண்டே வர வேண்டும், ஆனால் அவ்வாறு ஆரம்பத்தில் நடக்குமா?

     கண்டிப்பாக நடக்காது. தியானம் இருப்பவன் கண்களை மூடி நெற்றி நடுவில் கண்டால் சிறிய ஒளி தெரியலாம். அந்த ஒளியையே வேறெந்த சிந்தனைகளுமின்றி பார்த்துக் கொண்டிருந்தால் அது சில நாட்களிலேயே வெளிச்சமாகலாம்.  ஆனால் ஆரம்ப நிலையில் அது நடக்க வாய்ப்பே இல்லை. கண்களை மூடி நெற்றி நடுவில் காண முற்படும்போது மனம் வந்து குறுக்கிடும். உண்மையாகவே ஒரு பெரிய ஜோதி ஆசிரியர் சொன்னாற்போல் நம் கண்களிடையில் தெரியுமா என்று தோன்றும். கவனம் சிதறும். அப்புறம் வாசலில் ஹாரன் சப்தம் கேட்குதே நம் வீட்டுக்குத்தான் யாரேனும் வந்திருக்கிறார்களா என்று தோன்றும். கவனம் இன்னமும் சிதறும். இப்படியே அரை மணி நேரம் தியானம் இருந்தால் மனதின் மூலம் உண்டாகும் சிந்தனைகள் கிட்டத்தட்ட சில வினாடிகள் தவிர மீதி நேரமெல்லாம் ஆக்கிரமித்திருக்கும். இதனால் கவனம் சிதறிப் போனவன் தியானம் பழகுவதை விடவும் செய்து விடுவான். ஆனால் அந்த சில வினாடிகள் எதைப் பற்றியும் சிந்திக்காமல் நெற்றி நடுவே பார்வையைக் குவிக்க முடிகிரதல்லவா அதை இன்னொருவன் நினைத்துப் பார்க்கிறான். பரவாயில்லையே முதல் நாளிலேயே மனம் குவிக்கும் வித்தை நமக்குப் புரிந்து விட்டது இதை இன்னமும் நாம் பழக வேண்டும் என்று அடுத்தடுத்த நாட்களில் சிந்தனைகள் வருவதைக் கட்டுப்படுத்தினால் மனம் இன்னமும் குவிந்து நெற்றி நடுவிலேயே நிற்கும். இதுதான் குரங்கு போல அலையும் மனத்தைக் கட்டுப்படுத்தும் முறை என்றும் கூட சொல்லலாம்.

புத்தியின் மூலம் நாம் என்ன செய்ய முடியும் என்பதை அடுத்த பதிவில் காணலாம்.

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :