கட உபநிஷதத் தத்துவங்கள் - 7 - மனதின் இயக்கம்
மனம் என்பதற்கும் மனிதன் சிந்திப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நினைக்கும் அக்கணமே ஒரு செயலில் ஒருவனை ஈடுபட வைப்பதை மனம் என்று கொள்ளலாம். இந்த மனத்தின் அடிப்படை கருவிகளாக என்ன உள்ளது என்பதைக் காண்போம்.
மனம் எதன் மூலமாக ஒரு மனிதனை இயக்குகிறது??மனம் என்பது ஏதோ ஒன்றை நினைக்கிறது (நன்றாகக் கவனியுங்கள் சிந்திக்கவில்லை நினைக்கிறது. இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உண்டு.) சிந்தனை என்பது நிதானமாக தனக்கு ஒரு செயல் தேவையா, அதனால் நன்மை விளையுமா தீமை விளையுமா என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்து ஒருவனை இயங்க வைப்பது. ஆனால் மனமென்பது அப்படியல்ல நினைத்த அக்கணமே இயங்க வைப்பது. புத்தியை அதிகம் பயன்படுத்தாதவர்கள் தோல்வியாளர்கள் ஆகவே உள்ளது இதனால்தான்.
இப்போது சிறு உதாரணம் சொல்கிறேன். இரண்டு கல்லூரி மாணவர்கள் ரோடில் நடந்து செல்கையில் ஆலயம் தென்படுகிறது. ஒருவன் மனம் நினைக்கிறது. ஆமாம் கோவிலுக்கு சென்று என்ன வாழ்ந்தோம் சாமியாவது பூதமாவது என்று. உடன் அவன் கோவிலை விடுத்து நேராக நடந்து போகிறான். இன்னொரு மாணவன் நினைக்கிறான் கோவிலுக்கு செல்லலாமா என்று. உடன் நிதானமாக நின்று சிந்தித்துப் பார்க்கிறான். கோவிலுக்கு செல்வதால் தீமை எதுவும் இல்லை. நாம் நன்றாகப் படிக்க இறைவன் அருள் கிட்டும். இன்னொன்று இதே போல வாரம் ஒரு முறை கண்டிப்பாக கோவிலுக்கு சென்று மனமுருக இறைவனை வேண்ட வேண்டும் கண்டிப்பாக நம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நினைக்கிறான். கோவிலுக்குள் சென்று இறைவனை வேண்டி சிறிது நேரம் தியானத்தில் அமர்கிறான்.
இப்போது இன்னொரு காட்சி. முதல் மாணவன் கோவிலைத் தாண்டி செல்கையில் கொஞ்சம் தூரம் தாண்டி கவர்ச்சி நடனம் நடக்கும் கொட்டகை வருகிறது. அங்கிருந்த விளம்பரத்தில் இருந்த பெண்ணின் படத்தைக் கண்டவுடன் அவன் மனம் ஆசையடைகிறது. உடனே டிக்கெட் வாங்கி உள்ளே போய் விடுகிறான். இப்போது இரண்டாமவன் கோவிலுக்கு சென்று விட்டு அதே இடத்துக்கு வருகிறான். அவனும் வாலிபன்தான். அங்கிருந்த விளம்பரத்தில் இருந்த பெண்ணைப் பார்க்கையில் அவன் மனதில் சிறிய சலனம் உண்டாகிறது. உள்ளே போய் விடலாமா என்று ஒரு கணம் நினைக்கிறான். பின்னர் கொஞ்சம் நிதானமாக சிந்தனை செய்கிறான். நமக்கு படிக்க வேண்டிய வயதில் இது தேவையா? இதனால் நன்மை எதுவும் விளையுமா? இது தற்காலிகமான சுகத்தைத்தானே தரும்? நம் குடும்பம் எத்தனைக் கவுரவமானது? இங்கு நாம் செல்வது சரியாகுமா? இப்படியெல்லாம் நினைக்கிறான். சேச்சே தடுமாறிப் போகப் பார்த்தோமே இனி இந்தத் திக்கிலேயே பார்க்கக் கூடாது என்று சபதம் செய்து வீடு சென்று விடுகிறான்.
இதில் முதல் மாணவனின் மனம் மட்டுமே வேலை செய்தது. அவனுக்கு புத்தி வேலையே செய்யவில்லை. அதனாலேயே அவன் எதிர்காலமும் பாதிக்கப்பட்டு வீணாகப் போனது. ஆனால் இரண்டாவது மாணவனுக்கோ மனதுடன் புத்தியும் வேலை செய்தது. அதனால் அவன் சரியான முடிவை எடுத்தான். வாழ்க்கையிலும் சிறந்து விளங்கினான்.
சரி மனதின் இயக்கம் மட்டும் இருக்கும் ஒருவனுக்கு எந்தக் காரணங்களால் மனம் சலனமடைகிறது என்பதை அடுத்த பதிவில் காண்போம்.
ஆக்கம்: துரோணாச்சாரியார்