Saturday, June 27, 2015

Keerthivasan

எங்கே பிராமணன் ? – 19 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 4

எங்கே பிராமணன் ? – 19 – மனுநீதி – (மனு ஸ்ம்ருதி) – 4

கேள்வி : யாகம் செய்வது, வேதம் கற்பது என்பதெல்லாம், பிழைப்பதற்கு வழி இல்லையே?  வேதம் கற்பது – கற்பிப்பது; யாகம் செய்வது – செய்விப்பது; தானம் வாங்குவது – தருவது என்ற ஆறு கடமைகளில் ஜீவனத்திற்கு வழி?

சோ : இதுவும் கவனிக்கப்பட்டிருக்கிறது. மனு ஸ்ம்ருதி இவ்வாறு சொல்கிறது: ‘மேற்குறிப்பிட்ட ஆறு கடமைகளில் – மற்றவர்களுக்கு யாகம் செய்விப்பது; வேதத்தைக் கற்பிப்பது, தானம் வாங்குவது ஆகியவற்றின் மூலம் பிராமணர்கள், தங்கள் ஜீவியத்தை நடத்தலாம்’.
ஆக, இந்த வழிகளில் ஒரு பிராமணன் வாழ்க்கை நடத்தலாம். மற்ற பல தொழில்கள், வர்த்தகங்கள் அவனுக்குக் கிடையாது.

கேள்வி : ஆனால், பிராமணன் தானம் பெறலாம் என்று கூறுகிற போதே, மற்றவர்கள் பிராமணனுக்கு தானம் தருவதற்கு ஒரு ஊக்கம் அளிக்கப்படுகிறதே?இதை மறைமுகமாக ‘பிராமணனுக்குத் தானம் கொடு’ என்று சொல்வது போல்தானே இருக்கிறது?

சோ : இதில் ‘மறைமுகம்’ என்ன வேண்டிக் கிடக்கிறது? ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். பழைய நூல்களில் மறைமுகம் கிடையாது – எல்லாமே நேரிடைதான். அது இருக்கட்டும். தானம் தருவது பற்றிச் சொல்கிறேன். பிராமணனுக்குத் தானம் தருவது மிகவும் நல்லது என்று மனு ஸ்ம்ருதி மட்டுமல்ல, பல நூல்கள் கூறுகின்றன. ஏனென்றால், அவன், உலக நன்மைக்காக வேதம் ஓதி, யாகம் செய்து, தியாக வாழ்க்கையை மேற்கொள்பவன்.

கேள்வி : எல்லா பிராமணர்களையும் அப்படிச் சொல்ல முடியாதே? நான் இந்த காலத்தைப் பற்றிச் சொல்லவில்லை. அப்போதே கூட, எல்லா பிராமணர்களும் அப்படித்தான் தியாக வாழ்க்கை வாழ்ந்தார்களா?

சோ : இல்லை. இருந்திருக்க முடியாது.

கேள்வி : பிராமணனுக்குத் தானம் கொடு என்றால், அவர்களுக்கும் தானம் கொடுக்க வேண்டும் என்றுதானே ஆகிறது?

சோ : இல்லை. விளக்குகிறேன். எப்படிப்பட்ட பிராமணனுக்கு தானங்களைச் செய்ய வேண்டும் என்பதையும், எப்படிப்பட்ட பிராமணனுக்கு தானம் செய்யக் கூடாது என்பதையும் மனு ஸ்ம்ருதி மிகச் தெளிவாகச் சொல்லி இருக்கிறது.
‘தவ வாழ்க்கைக்குரிய குணம் எதுவும் இல்லாமலும்,
வேதத்தைக் கற்காமலும் வாழ்ந்து கொண்டு,
தானம் பெறுவதையே மிகவும் விரும்புகிற பிராமணனுக்கு தானம் செய்தால் –
அந்தப் பிராமணனும், அவனுக்கு தானம் செய்தவனும் –
கல்லும் அதன் மீது அமர்ந்து தண்ணீரில் இறங்கியவனும் போல, மூழ்கி விடுவார்கள்’
– என்று கூறுகிற மனு ஸ்ம்ருதி மேலும் சொல்கிறது:
‘உண்மையிலேயே வேதத்தை நன்கு கற்காதவனாகவோ;
சாஸ்திர அறிவை, ஒரு வேடமாகக் கொண்டிருப்பவனாகவோ;
பூனை குணம் உடையவனாகவோ இருக்கிற பிராமணனுக்கு,
ஒரு மிகச் சிறிய தானத்தைக் கூட விவரம் அறிந்தவர்கள் செய்ய மாட்டார்கள்’.

கேள்வி : ‘பூனை குணம் உடையவன்’ என்றால், அது என்ன குணத்தைக் குறிக்கிறது?

சோ : அதையும் மனு ஸ்ம்ருதி விளக்கியிருக்கிறது:
‘செல்வத்தின் மீதே குறியாக இருந்து;
தர்மத்தை ஒரு முகமூடியாகப் பயன்படுத்தி;
ஏமாற்றுகிற தன்மை கொண்டு,
பொறாமை உடையவனாகவும்;
மற்றவர்களுடைய நற்பெயரைச் சகியாதவனாகவும்;
நல்லோரை இழிவுபடுத்துவதில் முனைப்பு உடையவனாகவும் இருக்கிறவன் – பூனை குணம் உடையவன் எனப்படுகிறான்.

தனது இரையைப் பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக, சாது போல் நடந்து கொண்டு, இரை வெளியே வந்தவுடன் பெரும் ஆவேசத்துடன் அதன் மீது பாய்ந்து விடுகிற பூனை போன்றவன் – அந்த மாதிரி மனிதன்’.

ஆக,‘வேதம் முறையாக கற்காத பிராமணன்; சாஸ்திர அறிவை ஒரு வேடமாக அணிகின்ற பிராமணன்; பூனை குணம் உடைய பிராமணன் – ஆகியோருக்குத் தானம் கொடுத்தால் – தானம் வாங்கியவனோடு, கொடுத்தவனும் அழிவான்’ என்று கூறுகிறது மனு ஸ்ம்ருதி

ஆகையால், ‘ஒரு பிராமணன் எப்படி வாழ்ந்தாலும் அவன் தானங்கள் பெறத் தகுதி பெற்றவனாகிறானே?’ என்று நீங்கள் கேட்பது அர்த்தமற்றது. தகுதியற்ற பிராமணன் தானம் வாங்கினால், அவனுக்கு ஏற்படுகிற பாவத்திற்குப் பிராயச்சித்தம் கூடக் கிடையாது என்று கூறுகிறது மனு ஸ்ம்ருதி. அந்த மாதிரி ஏதாவது பிராயச்சித்தம் செய்ய அவன் முனைந்தால், அவன் அர்ப்பணிப்பது, அஸுரர்களைத்தான் சென்றடையும் என்றும் கூறுகிறது மனு ஸ்ம்ருதி.ஆகையால், பிராமணனுக்கு மிகவும் வசதியாக, ‘தானம்’ என்பதை விதித்து விட்டார்கள் – என்று கூறவே முடியாது. தானம் வாங்குகிற தகுதியற்ற பிராமணனுக்குச் செய்யப்படுகிற தானம், ஒரு பாவச் செயலே. அது மட்டுமல்ல – பிராமணன், அவனுக்கு விதிக்கப்பட்ட வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு வாழ்ந்தால் – அவன் பிராமணன் அல்ல என்றும் மனு ஸ்ம்ருதி கூறுகிறது. அதைப் பார்ப்போம்.

 – CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :