சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 3
திருச்சிற்றம்பலம்.
தனு கரண புவன போகம்
தனு எனும் உடம்பு மட்டும் உயிர் பெறுவதால் பயனில்லை.
அந்தக்கரணங்கள் ஆகிய மனம்,புத்தி,அகங்காரம்,சித்தம் எனும் நான்கும் இருந்தால் தான் உயிரின் அறிவு விளக்கமுற்று செயல்படும்.
புவனம் எனும் உலகம் இருந்தாலே உடம்பைப் பெற்ற உயிர் தங்கி இருந்து செயல்புரிய முடியும்.
போகம் எனும் அனுபவிக்கப்படும் பொருள்கள் இருந்தால் தான் உயிர்கள் இன்ப துன்பங்களை விருப்பு வெறுப்புடன் அனுபவிக்க முடியும்.
அந்தக் கரணங்கள் உயிரில் நுண்பொருளாக இருப்பவை.கேவலநிலையில் செயலற்றுகிடக்கும் உயிர்களுக்குப் பாசமாகிய தனு,கரண,புவன போகங்களைக் கொடுக்கக்கூடியவன் கருணையே உருவான இறைவன் ஒருவனேயாகும்.
பாசமும் பதி எனும் இறைவனைப் போன்றும் பசு எனும் உயிர்களைப் போன்றும் அழிவில்லாத என்றுமுள பொருளேயாகும்.
அவன்,அவள்,அது - இந்த மூன்று சொற்களால் சுட்டிக்காட்டக் கூடிய பொருட்கள் அனைத்தும் தோன்றி நின்று அழிவனவே.அவ்வாறு சுட்டிக் காட்ட இயலாதன அழிவில்லாத நித்தியப்பொருட்களாம்.
சைவ சித்தாந்தத்தில் அழிவு என்றால் பருப்பொருள் நுண்பொருளாக மாறுவதையே குறிக்கும்.
கண்களுக்குத் தெரிவன பருப்பொருள் (தூலம்)
தெரியாதன நுண்பொருள் (சூக்குமம்)
நுண்பொருளாக இருப்பது பருப்பொருளாக மாறுவதையே சற்காரிய வாதம் என்று சித்தாந்தம் கூறும்.அதாவது உள்ளனவே தோன்றும்,இல்லாதன தோன்றாது.
பதி,பசு,பாசம் ஆகிய மூன்றும் ஆதியும் அந்தமும் இல்லா நித்தியப்பொருட்கள்.இதுவே சைவ சித்தாந்தத்தின் அடிப்படைக் கொள்கை.இம்மூன்றையும் தவிர வேறு மூன்று நித்தியப் பொருட்களும் உண்டு.அவை பற்றி பின்னர் பார்ப்போம்.
திருச்சிற்றம்பலம்.
பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik