சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது. – 4
திருச்சிற்றம்பலம்!
உயிர் அறிவு உடையதாயின் அதனை அறியாமை எவ்வாறு பற்றும்?
உயிர் என்றுளதோ அன்று முதலே அறியாமை எனும் குற்றம் அதனைப்பற்றியே நிற்கும்.இதனை மூலமலம் அல்லது ஆணவமலம் என்பர்.
உயிர் நித்தியப் பொருளானதால் அதனைப்பற்றி நிற்கும் ஆனவமலமும் அழிவிலா நித்தியப் பொருளாம்.
பாசமாகிய ஆணவம் கண்களுக்குப் புலப்படாத நுண்பொருள்(சூக்குமம்).அறிவற்ற சடப்பொருள்.
பலபொருட்களை மறைக்கும் ஒரே இருளைப் போன்று பல உயிர்களின் அறிவை மறைத்து நிற்கும் ஆணவம் ஒன்றே ஒன்று தான்.ஒன்றேயாயினும் அது பொருந்திய ஆன்மாக்களின் தரன்களுக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்பப் பலவாகும்.
செம்பால் செய்யப்பட்ட பாத்திரங்களின் அகத்தும் புறத்தும் களிம்பு பீடித்திருக்கும்.அதுபோன்று உயிர் முழுவதையும் ஆணவம் வியாபித்திருக்கும். உயிரும் ஆணவமும் சமபலம் உடையன,அதனால் உயிர் தானாக ஆணவமலத்தை நீக்கிக் கொள்ள இயலாது.
கேவலம், சகலம், முத்தி ஆகிய மூன்று நிலைகளிலும் உயிரை ஆணவம் நீங்காது.ஆணவத்தை நீக்க வேண்டின் உயிருக்கு வேறு ஒருவரின் துணை வேண்டும்.(ஆணவத்தை நீக்குதல் என்பது அதன் வலிமையை குறைத்தலே ஆகும்).உயிருக்கு அத்தகைய துணை இறைவனின் திருவருளே ஆகும்.
கேவல நிலை - உயிர் உடம்பை பெறாத ஆதி நிலை.இந்நிலையில் ஆணவமலம் உயிரின் அறிவை மறைத்து அறிவற்ற சடப்பொருளைப் போன்று செயலாற்ற மயக்க நிலையில் வைத்திருக்கும்.
சகல நிலை - உயிர் உடம்பை பெற்ற நிலை.உயிரின் மெய்யுணர்வை அடக்கி விபரீத உணர்வை ஆணவம் தோற்றுவிக்கும்.இழிபொருட்களை உயர்வாகவும் துன்பத்தை இன்பமாகவும் கருதச் செய்யும்.கீழ்க்கண்ட ஏழு குற்றங்களை(காரியங்கள்) விளைவிக்கும்.
1. மோகம்(மயக்கம்)
2. மதம்(செருக்கு)
3. இராகம்(ஆசை)
4. கவலை
5. தாபம் (துன்பம்)
6. வாட்டம்.
7. விசித்திரம்(உடைமைச்செருக்கு)
மலபரிபாகம் என்பது யாது?
ஆணவமலத்தின் ஆற்றல், ஆன்மாவின் அறிவு இச்சை செயல்களை மறைக்க இயலாமல், நிற்கும் நிலையே, “மலபரிபாகம்" எனப்படும். (மலம் - ஆணவமலம், பரி - உபசர்க்கம்(உடம்பின்தன்மைகள்); பாகம் - திரிவு; பக்குவம்) அதாவது ஆணவமலத்தின் காரியங்கள் ஆகிய மோகம், மதம், இராகம், கவலை, தாபம், வாட்டம், விசித்திரம், என்னும் கெட்ட குணங்கள் ஆன்ம அறிவை விட்டு நீங்குதல்.
முத்தி நிலை - சிவன் திருவடியை உயிர் அடைந்த நிலை.உயிர் தாம் செய்த தவப்பயனால் இறைவன் திருவருளை நேரே பெற்று விளங்கும்போது அப்பெரோளியின் முன் ஆணவத்தின் மறைப்புச் சக்தி சற்றும் முனைந்து நிற்க இயலாது,அடங்கிக் கிடக்கும்.(சூரிய ஒளியில் விளக்கொளி அடங்கி இருப்பது போன்று)
உயிரின் மூன்று நிலைகளிலும் ஆணவம் அதனை விட்டுப் பிரியாது.ஏனெனில் ஆணவம் உயிரைப்போன்று நித்தியப் பொருளானதால் அதன் செயல்திறன் மட்டும் ஒவ்வொரு நிலையிலும் வேறுவேறாக இருக்கும்.
திருச்சிற்றம்பலம்.