சைவ சித்தாந்தம்: நான் புரிந்து கொண்டது - 6
திருச்சிற்றம்பலம்.இறைவனின் ஐந்தொழில்கள்:
சைவநெறி கூறும் ஐந்தொழில்களாவன படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என்பனவாகும். முழுமுதற்கடவுளாகிய சிவபெருமான் தானே இவையனைத்தையும் செய்வதும் உண்டு. பிரம்மா திருமால் உருத்திரன் மகேஸ்வரன் சதாசிவன் ஆகியோரைக் கொண்டு செய்விப்பதும் உண்டு.படைத்தல் - பிரம்மா
காத்தல் - விஷ்ணு
அழித்தல் - ருத்திரன்
மறைத்தல் - மகேசுவரன்
அருளல் - சதாசிவன்
இவர்கள் தமது புண்ணிய விசேடத்தால் முழுமுதற்பொருளாகிய சிவப்பரம்பொருளிடம் அதிகாரசக்தியை அவருடைய ஏவலால் பெற்று படைத்தல்,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அருளல் ஆகியவற்றை ஆற்றுவர்.
இறைவனாகிய சிவப்பரம்பொருள் எந்தவொரு கருவி காரணங்களும் இன்றி நினைத்த மாத்திரத்தில் ஐந்தொழில்களை மேற்கொள்வார்.
படைத்தல் - உள்ளதைத் தோற்றுவித்தல் (இல்லாததை தோற்றுவித்தல் எனப்பொருள் படமாட்டாது. உதாரணமாக பனிக்கட்டியைத் தோற்றுவித்தனர் என்றால் அங்கு நீர் பனிக்கட்டியாக மாறியுள்ளது என்றுதான் பொருள்படும். அதுபோலவே சூக்குமநிலையில் இருந்ததை(மாயையில் இருந்து) தூலநிலைக்கு கொண்டு வருதலே படைத்தல் எனப்படும். அதாவது காரணநிலை(சூக்குமநிலை)யில் இருந்து காரியநிலைக்கு(தூலநிலைக்கு) கொண்டு வருதல். மாயையில் இருந்து தனு,கரண,புவன போகங்களைப் படைத்தல்.
காத்தல் - தூலநிலைக்கு கொணர்ந்தவற்றை அந்தநிலையில் தொடர்ந்தும் நிலைபெறச்செய்தல். அதாவது தனு,கரண,புவன போகங்களை உயிர்களின் வினைப்பயனுக்கு ஏற்ப அனுபவிக்கும் வரை நிலை பெறச்செய்தல்.
அழித்தல் - தூலநிலையில் இருந்ந்து சூட்சும்ச் நிலைக்கு வருதல், அழித்தல் என்பது முற்றாக இல்லாமல் செய்தல் என்று பொருள் அன்று.
பிறவிச்சுழற்சியால் உயிர்களுக்கு ஏற்படும் களைப்பு நீங்கும் பொருட்டு படைத்தவகைகளை மீளவும் மாயையில் ஒடுக்குதல்.
மறைத்தல் - பற்றுக் கொண்ட உயிர்கள் பக்குவம் பெறுவதற்காக இறைவன் தன்னை மறைத்து உலகத்தையே அவ்வுயிர்கள் காணுமாறு காட்டுதல்.
ஆணவம் காரணமாக இறைவனே உயிர்களுக்கு கன்மம்,மாயை ஆகியவற்றை கூட்டுவித்தான். அதாவது ஆணவ நோய்க்கு மருந்தாக ஏனைய இருமலங்களை கூட்டுவித்தான். மும்மலங்களும் சடப்பொருட்கள். தாமாகத் தொழிற்படாது. இறைவன் அவற்றைத் தொழிற்பட வைத்து அவற்றின் சக்தியை குறைவடையச் செய்கின்றான். சடப்பொருள் தொழிற்பட அதன் சக்தி தேயும் என்பது பௌதீக விஞ்ஞானம்! அதை இங்கு பொருத்தி உணர வேண்டும்.
அருளல் - பக்குவம் பெற்று தன்னை நோக்கும் உயிர்களுக்கு தன்னைக் காட்டித் தன்னுடைய திருவடியில் சேர்த்தல்.
எனவே படைத்தல், காத்தல்,அழித்தல் என்பன மாயையிலும் மறைத்தல்,அருளல் உயிர்களிடத்திலும் நிகழ்கின்றன.
திருச்சிற்றம்பலம்.
பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களுக்கு: Janarthanam Karthik