திருமழபாடி திருத்தலத்து இறைவன் மீது திருநாவுக்கரசு ஸ்வாமிகள் பாடிய பதிகப் பாடல்களை ஒவ்வொன்றாக அர்த்தத்துடன் அனுபவிப்போம்.
பாடல் எண் : 8
பொன்னியலுந் திருமேனி உடையான் கண்டாய்
பூங்கொன்றைத் தாரொன் றணிந்தான் கண்டாய்
மின்னியலும் வார்சடையெம் பெருமான் கண்டாய்
வேழத்தின் உரிவிரும்பிப் போர்த்தான் கண்டாய்
தன்னியல்பார் மற்றொருவ ரில்லான் கண்டாய்
தாங்கரிய சிவந்தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கையோர் கூறன் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
பொழிப்புரை :
மழபாடி மன்னும் மணாளன், பொன்னார் மேனியனாய்க் கொன்றைப் பூ மாலை அணிந்தவனாய், ஒளிவீசும் நீண்ட சடை உடையவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்த வனாய்த் தன் தகுதியை உடையார் மற்றொருவர் இல்லாதானாய்ப் பிறர் ஒருவராலும் பொருந்துதற்கரிய மங்கலப் பொருளாய்த் தன்னோடு கூடிய பார்வதி பாகனாய் உள்ளான்.
பாடல் எண் : 9
ஆலாலம் உண்டுகந்த ஆதி கண்டாய்
அடையலர்தம் புரமூன்றும் எய்தான் கண்டாய்
காலாலக் காலனையும் காய்ந்தான் கண்டாய்
கண்ணப்பர்க் கருள்செய்த காளை கண்டாய்
பாலாரும் மொழிமடவாள் பாகன் கண்டாய்
பசுவேறிப் பலிதிரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவரிய மைந்தன் கண்டாய்
பொழிப்புரை :
மழபாடி மன்னும் மணாளன் ஆலகால விடத்தை உண்டு மகிழ்ந்த முதற்பொருளாய்ப் பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவனாய்த் தன் திருவடியால் கூற்றுவனை ஒறுத்தவனாய், கண்ணப்பருக்கு அருள் செய்த தலைமகனாய், பால்போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய், காளை மீது இவர்ந்து பிச்சைக்கு அலையும் பண்பினனாய்த் திருமாலும் அறிவதற்கரிய வலியவனாய் உள்ளான்.
பாடல் எண் : 10
ஒருசுடராய் உலகேழு மானான் கண்டாய்
ஓங்காரத் துட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரிசுடராய் விளங்கொளியாய் நின்றான் கண்டாய்
விழவொலியும் வேள்வொலியு மானான் கண்டாய்
இருசுடர்மீ தோடா இலங்கைக் கோனை
யீடழிய இருபதுதோ ளிறுத்தான் கண்டாய்
மருசுடரின் மாணிக்கக் குன்று கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
பொழிப்புரை :
மழபாடி மன்னும் மணாளன் ஒப்பற்ற பேரொளியாய், உலகு ஏழும் பரவி ஓங்காரத்தின் உட்பொருளாய் நின்று, ஞாயிறு முதலிய ஒளிப் பொருள்களாகவும், அவற்றிலிருந்து வெளிப்படும் ஒளியாகவும் அமைந்து, திரு விழாக்களிலும் வேள்விகளிலும் செவிமடுக்கப்படும் ஒலிவடிவினனாய், தன் மீது ஞாயிறும் திங்களும் வானில் ஊர்ந்து செல்வது இராவணனுடைய ஆணையால் தடுக்கப்பட்ட இலங்கையில் மன்னனாகிய அவனுடைய வலிமை அழியுமாறு அவன் இருபது தோள்களையும் நசுங்கச் செய்து ஒளிவிளங்கும் மாணிக்கக்குன்றாய் விளங்குகின்றான்.
தொகுப்பு: Arul Sivasankaran