திருக்கோயில் வகைகள் - 1
கடவுள் அல்லது தெய்வங்கள் எழுந்தருளியிருக்கும் திருவுண்ணாழிகைக்கு விமானம்என்று பெயர். இந்த விமானங்களின் வெவ்வேறு விதமான அமைப்பைக் கொண்டு இவற்றிற்கு வெவ்வேறு பெயர்
கூறுவர். முக்கியமாகக் கூரையின் அமைப்பைக் கொண்டு அவைகளுக்கு வெவ்வேறு பெயர்களைக் கூறுகிறார்கள். திருநாவுக்கரசு சுவாமிகள் தமது திருஅடைவு திருத்தாண்டத்தின் 5ஆம் செய்யுளில், கோயில் கட்டட வகைகளின் பெயர்களைக் கூறுகிறார். அச்செய்யுள் இது:
"பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டு மற்றும்
கரக்கோயில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
இருக்கோதி மறையவர்கள் வழிபட் டேத்தும்
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக் கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே."
இப்பாடலிலே, சோழன் செங்கணான் கட்டிய எழுபத்தெட்டுக் கோயில்களைக்
கூறிய பின்னர், கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் என்று சில வகையான கோயில்களைக் கூறுகிறார்.
சிற்ப நூல்கள் விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிருஷ்டம், கேசரம் என்னும் ஏழு விதமான கோயில்களைக் கூறுகின்றன. காமிகாகமமும் இப்பெயர்களைக் கூறுகிறது.
திருநாவுக்கரசு சுவாமிகள் தமிழ்ப் பெயரால் கூறுகிறதையே சிற்ப நூல்கள் வடமொழிப் பெயரினால் கூறுகின்றன. பெயர் வேற்றுமையே தவிரப் பொருள் வேற்றுமை இல்லை. எந்தெந்தக் கோயில்களுக்கு எந்ததெந்தப் பெயர் என்பதற்குச் சிற்ப நூல்களில் விளக்கம் கூறப்படுகின்றன. ஆனால், திருநாவுக்கரசர் கூறுகிற பெயர்களுக்கு விளக்கம் இப்போது தெரியாதபடியினாலே, அவை எந்தெந்தக் கோயிலின் பெயர்கள் என்பது தெரியவில்லை. இதைக் கண்டறிய வேண்டியது நமது நாட்டுச் சிற்பக் கலைஞர்களின் கடமையாகும். ஆயினும், நம்மால் இயன்ற அளவு அடுத்தடுத்த பதிவுகளில் காண்போம்.
– ஞான ஆரண்யம்