திருக்கோயில் வகைகள் – 2
ஆலக்கோயில்
ஆலக்கோயில் என்பது ஆனைக்கோயில் என்பதன் மரூஉ. சிலர் ஆலமரத்தினால் கட்டப்பட்ட கோயில் என்று கருதுகிறார்கள். இது தவறு. ஆலமரம், கட்டடம் கட்டுவதற்கு ஏற்ற உறுதியான மரம் அன்று. ஆலமரத்தினால் கட்டடம் கட்டும் வழக்கம் இல்லை. வேறு சிலர் ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் என்று கருதுகிறார்கள். இதுவும் தவறு. ஆலக்கோயில் என்பது கோயிற் கட்டட வகைகளில் ஒன்றென்பது தெளிவானது. ஆலக்கோயிற் கட்டடம், மேலே கூறியது போல ஆனைக்கோயில் வடிவமாக இருக்கும். சிற்ப சாஸ்திரங்களில் இக்கோயில் கஜபிருஷ்ட விமானக் கோயில் என்றும், ஹஸ்திபிருஷ்ட விமானக் கோயில் என்றும் கூறப்படுகிறது.
கஜம், ஹஸ்தி என்னும் சொற்களுக்கு யானை என்பது பொருள். யானையின் முதுகுடன் கூடிய பின்பகுதி போன்று இந்தக் கோயிலின் கூரை அமைந்திருப்பதனால் இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. தமிழிலே இது யானைக் கோயில் என்று வழங்கப்பட்டுப் பிறகு ஆலக்கோயில் என்று மருவிற்று. சுந்தரமூர்த்தி நாயனார் திருக்கச்சூர் ஆலக்கோயிலைக் கூறுகிறார்.
திருஇன்னம்பர்,திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு, திருக்கழுக்குன்றத்துப் பக்தவத்சல ஈசுவரர் கோயில், முதலியவை ஆலக்கோயில் எனப்படும் கஜபிருஷ்டவிமானக் கோயில்கள் ஆகும். மகாபலிபுரத்துச் சகாதேவ ரதம் என்னும் கோயிலும் மூன்று நிலையுள்ள மாடக்கோயிலாக அமைந்த ஆலக் கோயிலாகும்
கரக்கோயில், ஞாழற் கோயில், கொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், போன்றவற்றை பற்றி அடுத்த பதிவுகளில் காணலாம்.
– ஞான ஆரண்யம்