இதுதான் இந்துமதம் – 09
இறைவன் எதற்காக இருக்கிறான் என்று பார்க்கும் முன், இந்து மதப்படி இறைவன் என்பது யார் ? அவன் தன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.
இந்து மதத்தில் இறைவன் பலவிதமாக பார்க்கப்படுகிறான். இறைவன் ஒருவனாகவும், பலவாகவும் பார்க்கப்படுகிறான். அது போல இறைவன் அருவமாகவும், ஒரே உருவமாகவும், பல உருவங்களாகவும் வணங்கப்படுகிறான்.
ஏன் இப்படி என்று நாம் யோசிப்பதற்கு முன் எண்ணிக்கை என்பது என்ன என்று பார்க்க வேண்டும்.
ஆதியில் இந்த பிரபஞ்சம் விரிவடையாமல் ஒன்றே ஒன்றாக நிலைபெற்று இருந்ததாக அறிவியலின் "பிக் பாங் தியரி" சொல்கிறது. அப்படி இருக்கையில் எண்ணிக்கைக்கு அவசியம் உள்ளதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஒன்றை தவிர வேறு எதுவுமே இல்லாதபோது எண்ணிக்கை என்பதே அவசியமில்லாது போகிறதே ? பண்மை என்று ஒன்று இருப்பதால் தான் "ஒருமை" என்கிற குறிப்பே அவசியமாகிறது.
அவ்விதமே இந்த பிரபஞ்சம் "தங்க கருவறை" என பொருள்படும் "ஹிரன்யகர்ப" எனும் கருவறையில் இருந்து தோன்றியதாக உலகின் பழமையான ஞான வெளிப்பாடான "ரிக் வேதம்" குறிப்பிடுகிறது. அக்கருவறையில் இருந்து பிரபஞ்சம் தோன்றிய பிறகே அது எண்ணிலடங்காத வகையில் விரிவடைகிறது. ஆக எண்ணிக்கைக்கே அவசியம் இல்லாமல் இருந்த ஒன்று, எண்ணிக்கைக்கு அடங்காத வகையில் விரிவடைகிறது.
நீங்கள் இறைவனை ஒன்றே ஒன்றாக உணரலாம். அங்கு எண்ணிக்கைக்கு அவசியம் இல்லாமல் போகிறது. ஒன்று மட்டுமே உள்ளது வேறு எதுவுமே இல்லை என்கிற போது எண்ணிக்கைக்கு ஏது அவசியம் ?
இறைவனை நீங்கள் பலவாகவும் உணரலாம். அந்த எண்ணிக்கை அளவில்லாமல் போகிறது. இறைவன் இல்லாமல் எதுவுமே இல்லை என்கிற போது, காணும்/கேட்கும்/ஸ்பரிசிக்கும்/நுகரும்/சுவைக்கும் அனைத்தும் இறைவன் எனும் போது இறைவன் எண்ணிக்கைக்கு அடங்காமல் போகிறான்.
ஆக மொத்தத்தில் இரண்டிலுமே எண்ணிக்கை பயன் தராது. எண்ணிக்கை என்பது காரண அறிவின் வெளிப்பாடு. இறைவனையோ காரண அறிவால் நாம் அறிந்து கொண்டு விட இயலாது. ஆகையால் இதன் மூலம் இறைவன் ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் என்பதை நாம் அறிய முடிகிறது.
நல்லது, அடுத்து இறைவனை அருவமாக, ஒரே உருவமாக, பல உருவங்களாக எப்படி பார்க்கலாம் ?
அடுத்த பகுதியில் பார்ப்போம்.