இதுதான் இந்துமதம் – 10
இறைவனுக்கு உருவம் உள்ளதா ? அவனை உருவமாக பார்க்கலாமா ? அருவமாக பார்க்கலாமா ?
முதலில் பார்த்தல் என்றால் என்ன ? எதன் மூலமாக பார்க்கிறோம் ?
எதை பார்க்கிறோம் ?
கண்கள் மூலமாக பார்க்கிறோம். கண்களால் எல்லாவற்றையும் பார்த்து விட முடியுமா ? நம் கண்களுக்கு புலப்படாத எவ்வளவோ உள்ளனவே ? அவ்வளவு ஏன் மிருகங்களின் கண்களுக்கு புலப்படும் பலவற்றை கூட நம் மனித கண்களால் பார்க்க முடியவில்லையே ? ஒரு குறிப்பிட்ட ஒளி அளவுக்கு உட்பட்ட உருவங்களை மட்டுமே நாம் காண இயலும் என்கிற நிலையில் இறைவனுக்கு உருவம் உள்ளதா இல்லையா என்று நம்மால் எப்படி சொல்ல இயலும் ?
நம் கண்களுக்கு முன்பேயே செல்லும் பல கோடி நுன்னியிர்களை நம்மால் காண முடிவதில்லை. அது போலவே மிகப்பெரும் உருவங்களையும் நம்மால் காண இயலாது அல்லவா ? விஞ்ஞானிகள் நட்சத்திர மண்டலங்களில் நடப்பதையும், ஒரு சிறு அணுவில் நடப்பதையும் ஒப்பீடு செய்து, நாம் பிரபஞ்சத்தில் காணும் பூமி, சூரியன், கிரகங்கள், கருந்துளை (black hole) விண்கல் பாதை (Asteroid Belt) விண்கற்கள் (Asteroids) அடிவளி மண்டலம் (Trophosphere), வெளி மண்டலம் என ஒவ்வொன்றையும், ஒரு அணுவுக்குள் நடக்கும் செயல்பாடுகளுடன் ஒப்பீடு செய்து, அவற்றில் உள்ள ஒற்றுமைகளை விளக்குகிறார்கள்.
நம் சூரிய மண்டலத்தை ஒரு சிறு அணுவாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். நம் சூரியன் அதில் இருக்கும் ஒரு "நியூக்ளியஸாகவும்", நம் பூமி அந்த சூரியனை சுற்றும் "எலக்ட்ரானாகவும்" இருக்கும் பட்சத்தில் நாம் எத்தனை சிறிய ஒரு உயிரினமாக இருப்போம் ? உதாரணத்திற்கு இந்த பிரபஞ்சம் என்பது இறைவனின் உருவமாக இருந்து, அதில் உள்ள ஒரு அணு நம் சூரிய மண்டலமாக இருக்கும் பட்சத்தில் நம்மால் இறைவனை முழுமையாக பார்ப்பது என்பது எத்தனை அரிதான் ஒன்று ? கீதையில் அர்ஜுனனுக்கு பிரத்யேகமாக "ஞானக் கண்" அதனால் அல்லவா வழங்கப்படுகிறது ?
அடுத்தது நாம் பார்க்கும் ஒரு சிலவற்றும் உண்மையானதா என்பதை பார்த்தாக வேண்டும்.
இந்த கணப் பொழுதில் உருவம் உள்ளது, அடுத்த கணத்தில் உருவம் இல்லாது போகிறது. உருவம் இல்லாமல் இருப்பதோ திடீரென உருவம் பெறுகிறது. இதில் எதற்கு உருவம் உள்ளது என்று சொல்வீர்கள் ? எதற்கு இல்லை என்று சொல்வீர்கள் ? நாம் உருவம் உள்ளது என்று சொல்வது ஒரு குறிப்பிட்ட மூலக்கூறு அமைப்பைதான் (Molecular structure). அந்த மூலக்கூறு அமைப்பு எப்போது வேண்டுமானலும் வேறு ஒரு அமைப்புக்கு மாறலாம். அப்படி மாறும் மூலக்கூறு அமைப்புகள் பல நம் கண்களுக்கு புலப்படாமலும் போகலாம். இந்த நிலையற்ற தனமையைதான் "மாயை" என்கிறார் ஆதிசங்கரர்.
எது உருவம், எது அருவம் என்பதில் நாம் எத்தனை பலவீனமானவர்கள் என்பது புரிகிறதா ? அடுத்த பகுதியில் மேலும் தொடர்வோம்.
– Englightened Master