இதுதான் இந்துமதம் – 14
நம் அனைத்து துயரங்களுக்கும் காரணம் "நாம் தான் அனைத்திற்கும் காரணம்" என்கிற எண்ண ஓட்டமே. அதுதான் வெறுப்பை உண்டாக்குகிறது, அதுதான் பற்றை உண்டாக்குகிறது, கோபத்தையும், துக்கத்தையும் அதுவே உண்டாக்குகிறது. அனைத்தையும் இறைவன்பால் ஒப்படைத்து அவனையே சரணடைகையில் பக்தி பூரணத்துவம் பெறுகிறது. மனம் ஒடுங்கி பேரானந்த நிலையை நாம் அடைகிறோம்.
இதையேதான் கர்ம யோகமும் கூறுகிறது. "செயல்பட மட்டுமே உனக்கு அதிகாரம் இருக்கிறது, அந்த செயலின் பலன் என்னவாக இருக்கும் என்பதில் இல்லை" என்கிறார் கீதையில் பகவான். நவீன மேலான்மை கல்வி இதையே "process oriented management" என்கிறது. ஒரு இலக்கை நிர்னையிக்கிறோம். அந்த இலக்கையே நினைத்துக் கொண்டிருந்தால் நமக்கு பதற்றமே ஏற்படும். அதன் வழிமுறைகளை நாம் முழு கவனத்துடன் கையாண்டால் இலக்கு தானாக அடையப் பெறுகிறது. பற்றற்ற செயல் என்பது இங்கே உணர்வுகள் இல்லாமல் செயல்புரிவதை குறிக்கிறது.
ஒரு நேர்கானலில் நீங்கள் பங்கு பெற உள்ளீர்கள். அதில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்கு. அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? வெற்றி பெறுவீர்களா இல்லையா எனும் பலனின் உங்களுக்கு அதிகாரம் இல்லை. அது நீங்கள் செயல்படும் விதம் மற்றும் உங்கள் போட்டியாளர்கள் செயல்படும் விதத்தை பொறுத்து அமைகிறது. வெற்றி பெறுவோமா இல்லையா என்கிற அந்த பலனை குறித்து நீங்கள் யோசித்து கொண்டே இருந்தால் பதற்றம் அதிகரிக்கும், அது உங்களை தடம் புரள செய்து விடும். ஆனால் நேர்கானலில் எப்படி எப்படி செயலாற்ற வேண்டும் என்பதில் உங்களுக்கு அதிகாரம் உள்ளது. நேர்கானலில் கேட்கப்படும் கேள்விகளை சரியாக கேட்டல், தெளிவாக புரிந்து கொள்ளுதல், அதற்கு உங்களால் இயன்ற அளவிற்கு பதில் தருதல் ஆகிய ஒவ்வொரு செயல்முறையிலும் நீங்கள் கவனம் செலுத்தினால் போதுமானது. இலக்கு தானாக அடையப்பெறுகிறது. இதுவே கர்ம யோகத்தின் அடிப்படையாக இருக்கிறது.
ஒரு கர்ம யோகி தன்னை ஒரு கருவியாக எண்ணிக் கொள்கிறான். இறைவனே செயல்புரிகிறான் நான் வெறும் கருவியே என்று செயலாற்றுகிறான். கருவிக்கு ஏது உணர்வுகள் ? ஆகையால் இலக்கை அவன் எளிதில் அடைந்து விடுகிறான். ஒரு கருவியாக இருப்பதால்தான் அவனால் பற்றற்று செயல்புரிய முடிகிறது.
பக்தி யோகத்தில் பரம்பொருளை பற்றிக் கொள்கிறோம். "பற்றுக பற்றற்றான் பற்றினை" எனும் தெய்வ புலவர் வள்ளுவர் வாக்கினை ஒத்து பற்றற்ற பரம்பொருளை பற்றுகிறோம். கர்ம யோகத்திலோ நம் செயல்களின் மீதுள்ள பற்றை விலக்கிக் கொள்கிறோம். இரண்டும் ஒன்றே அல்லவா ?
மேலும் பார்ப்போம்.