இதுதான் இந்துமதம் – 13
பணிவும், பக்தியும், அனைத்து உயிர்களின் மேல் கருனையும் மிக முக்கியமானதாக இந்து மதத்தில் கருதப்படுகிறது.
பணிவு என்பது எப்படி வரும் ? அதை செயற்கையாக உருவாக்க இயலாதே ? அதற்கு நாம் இறைவனின் அளப்பறிய ஆற்றலை குறித்து அறிய முற்பட வேண்டும். நம் மனம் மற்றும் ஐம்புலன்களின் இயலாமையை உணர வேண்டும். இவ்விரண்டையும் நாம் மீண்டும் மீண்டும் உணர தொடங்கிட பணிவு பிறக்கத் தொடங்குகிறது. நம் அகங்காரம் நம்மை விட்டு விலகத் தொடங்குகிறது. அகங்காரம் விலக தொடங்கினாலே இறைவனின் கருனை உணரப்படுகிறது.
நமக்கு சலிப்பு ஏற்படும் வகையில் இதிகாசங்களிலும், புரானங்களிலும் பல விதமான அரக்கர்களை, அசுரர்களை நாம் காண்கிறோம். ஒரு அரக்கன் அழிக்கப்பட்டதும் மற்றொருவன் தோன்றுகிறான். இந்த அரக்கர்கள், எத்தனை முறை நாம் அழித்தாலும் நம்முள் "நான் பெரியவன்" என்று திரும்ப திரும்ப ஏற்படுகின்ற அகங்காரத்தையே குறிக்கிறது. நான் பெரியவன் என்கிற அகங்காரத்தை நாம் அழிக்க வேண்டியது முதல் படி, நானே செயலாற்றுகிறேன் எனும் "அகம்பாவத்தை" அகற்றுவது இறுதிப் படி. இந்த அகம்பாவம் மறையும் போதுதான் நாம் இறைநிலையை அடைகிறோம். இதுவே "யோகம்" எனப்படுகிறது.
சித்தர்களும், ஞானிகளும், மகரிஷிகளும் தங்கள் அகம்பாவத்தை துறந்தவர்கள். அகம்பாவத்தை துறப்பதே இந்து மதம் எனும் சனாதன தர்மத்தின் சாரமாக இருக்கிறது. பக்தி யோகம், கர்ம யோகம், ஞான யோகம், ராஜ யோகம் என பல்வேறு வழிமுறைகளும் அகம்பாவத்தினை கடப்பதற்கான செயல்முறைகளே.
பக்தி யோகம் எனப்படுவது இறைவன் மேல் எதிர்ப்பார்ப்பில்லாத அன்பை செலுத்துவதே. இறைவனை மளிகை கடைக்காரராக பாவித்து கொடுப்பதும், பெறுவதுமாக இல்லாமல். "இறைவா, நீ அனைத்துமானவன், நீயன்றி எனக்கு வேறு நாதியில்லை" என்று முழுவதுமாக நம்மை அர்பிப்பதே உண்மையான பக்தியாகிறது. இந்த பக்குவ நிலைக்கு நம்மை எடுத்து செல்வதற்கு பல சடங்குகளை சனாதன தர்மம் முன்மொழிகிறது. கற்பூரம் காட்டுவதும், தேங்காய் உடைப்பதும் இதர பல சடங்குகள் செய்வதும் அந்த பக்குவ நிலைக்கு நம்மை நாமே கொண்டு செல்லத்தான்.
இறைவன் காலத்தாலும், தூரத்தாலும் மிக சமீபமானவன். நம்மிடமிருந்து பிரிக்க முடியாதவன். ஆனால் மாயையில் ஆட்பட்ட நம் மனம் அவனை கிரகித்து கொள்ள இயலாமல் வைத்திருக்கிறது. அந்த இயலாமையை போக்குவதற்கே பக்தி யோகம் பலவிதமான வழிமுறைகளை கையாள்கிறது. இறைவனை நண்பனாய், எஜமானனாய், காதலனாய், தாயாய் தந்தையாய், குழந்தையாய் ஏன் சேவகனாய் கூட பாவித்து அவன் மேல் பக்தி செலுத்த முனைகிறது. பக்தி நம் அகம்பாவத்தை அழிக்கிறது, நம்மை இறைநிலைக்கு எடுத்து செல்கிறது. ஆத்ம அனுபவத்தை பெற்றுத் தருகிறது.
மேலும் பார்ப்போம்.