ரத்தத்தில் முளைத்த என் தேசம் - 15
– Englightened Master
ஈராக்கை முஸ்லீம் படை பாரசீக பேரரசிடம் இருந்து கைப்பற்றியது என்று பார்த்தோம். அது போலவே சிரியாவை "பைஜான்டைன்" பேரரசிடம் இருந்து கைப்பற்றியது முஸ்லீம் படை. பாரசீகர்களுக்கும், பைஜான்டைன் பேரரசுக்கும் பல நூறு ஆண்டுகளாக பிணக்கம் இருந்து வந்ததால் பாரசீககத்தை சேர்ந்த ஈராக்கியர்களுக்கு, முன்னாள் பைஜான்டைன் பேரரசை சேர்ந்த சிரியா மீது எப்போதுமே ஒரு வெறுப்பு இருந்தது. புதியதாக அலி தலைமையில் அமைய உள்ள இஸ்லாமிய பேரரசின் தலமையகம் தங்கள் நாட்டிலேயே ஏற்பட வேண்டும் என்று இரு தரப்பினர்களும் விரும்பினார்கள். அலி நான்காவது காலிஃபாக பொறுப்பேற்ற பிறகு அவரை ஈராக்கிற்கு வருமாறும் ஈராக்கில் உள்ள "குஃபா" நகரத்தை தலை நகராக கொள்ளுமாறும் ஈராக்கியர்கள் வற்புறுத்தினர். அலியும் சம்மதித்தார்.
மூன்றாம் கலீஃபா உத்மானின் பேரரசில் சிரியாவின் கவர்னராக இருந்த முவையா (Muawiyah) மிகச்சிறந்த போர் தளபதியாக இருந்தார். அவர் அலியை நான்காவது கலீஃபாக ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. அவர் உமாயத் வம்சத்தை சேர்ந்தவர். உமாயத் அரசு என்று ஒன்றை அவர் தன்னிச்சையாக சிரியாவில் ஏற்படுத்துகிறார். இதனால் ஈராக்கிற்கும் சிரியாவுக்கும் பெரும் பிணக்கம் இருந்தது.
இதற்கிடையே மெக்காவுக்கு புனித பயனம் மேற்கொள்ள இருக்கும் ஆயிஷா உத்மனின் கொலை குறித்தும், அலி நான்காவது கலீஃபாக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் கேள்வியுற்று அதிர்ச்சி அடைகிறார். உத்மானின் கொலைக்கு அலியும் அவரின் ஆதரவாளர்களும்தான் காரணம் என்று அவர் நினைத்தார். அலியை பெரிதும் வெறுத்த ஆயிஷா, ஜுபைர் மற்றும் தல்ஹா (Zubair and Talha) என்கிற இரண்டு படை தளபதிகளுடன் அலியை நோக்கி "பாஸ்ரா" செல்கின்றனர். உத்மனை கொலை செய்தவர்களை பிடித்து உடனுக்குடன் அவரக்ளுக்கு அலி தண்டனை கொடுக்க வேண்டும் இல்லை என்றால் போர்தான் வழி என்று அலியிடம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
500 பேர் செய்த குற்றத்திற்காக ஐயாயிரம் பேரை நாம் பலி வாங்கிட வேண்டாம் என்று அலி ஆயிஷாவை சமாதான படுத்தினார். ஜுபைர் மற்றும் தல்ஹாவையும் அலி சமாதானப்படுத்த அவர்களும் சமாதானத்திற்கு ஒப்புக் கொண்டு அங்கிருந்து திரும்பி செல்கின்றனர். ஆனால் உத்மனை கொன்றதாக சொல்லப்படும், ஈராக்கை சேர்ந்த 'குரா'க்களுக்கு (Qurra) இது பிடிக்கவில்லை. (குராக்கள் ஈராக்கில் உள்ள் குஃபாவை மையமாக கொண்ட பாலைவன நாடோடிகள் மூர்கர்கள். போர்புரிவதில் இவர்கள் கைதேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் உத்மன் கலீஃபான பின் அது மெல்ல குறைக்கப்பட்டது. இதனால் உத்மன் மீது இவர்களுக்கு ஏற்பட்ட வெறுப்பால் அவரை கொன்றார்கள் என சொல்லப்படுகிறது) இந்த குராக்கள் இரவோடு இரவாக அவர்கள் தங்கியிருந்த பந்தல்களுக்கு தீ வைத்தனர். மர்வான் (Marwan ibn al-Hakam) என்கிற சூழ்ச்சிக்காரர் விஷ அம்பை எய்தி தல்ஹாவை கொலை செய்கிறார். தன் பழங்குடியை தல்ஹா அவமதித்து விட்டு போரில் பாதியில் சென்றதாக இவ்வாறு செய்கிறார் மர்வான்.
பாஸ்ராவை சேர்ந்த கதி காப் இப்ன் (Qadi Kaab ibn Sur) எனும் பெரியவர் குரானை கையில் ஏந்திக் கொண்டு ஒட்டகத்தில் மீது ஏறி முஸ்லீம்கள் மூஸ்லீம்களோடு போரிடுவதை தடுக்குமாறு ஆயிஷாவை கேட்டுக் கொள்கிறார். ஆனால் அலியின் படையில் இருந்து வந்த ஒரு அம்பினால் அவர் உயிர் பறிக்கப்படுகிறது. அலியின் படை ஆயிஷாவின் ஒட்டக இருக்கையை உடைத்தெறிய தயாராகுகிறது. ஆயிஷாவை காக்க வந்த புரட்சிப் படை வீரர்கள் அவரின் ஒட்டகத்தை சூழ்ந்து நிற்க, அவர்களின் தலைகளை வாள்களால் துண்டாடுகின்றனர் அலியின் வீரர்கள். ஆயிஷா அமர்ந்த ஒட்டகத்தின் கால்கள் வெட்டப்பட, கீழே விழுகிறார் ஆயிஷா. அவர் அலியின் படையால் கைப்பற்றப்படுகிறார். ஆயிஷாவை மன்னிக்கும் அலி, அவரை தன் தம்பி அபி பக்கர் மூலமாக மெதினாவுக்கு அனுப்பி வைக்கிறார். போர் புரியாமல் சமாதானமாகி மெதினாவுக்கு திரும்பிய மற்றொரு தளபதி ஜுபைரும் வழியில் ஒரு வீரனால் கொல்லப்படுகிறார்.
மெதினாவை அடையும் ஆயிஷா அதன் பின் அரசாங்க விஷயங்களில் தலையிடுவதை நிறுத்தி விடுகிறார். ஆனால் ஒட்டகப் போருக்கு காரணமான மர்வானை மட்டும் அவர் மன்னிக்கவில்லை. நடந்து முடிந்த போர் முஸ்லீம்களை இனிமேல் சேரவே முடியாது என்கிற அளவிற்கு உடைத்து போடுகின்றது. அது முஸ்லீம் சரித்திரத்தையே மாற்றுகிறது.