கேள்வி : ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள்; சன்யாஸி ஆவதற்கு சடங்கு எதுவும் கிடையாதா? அவரவர் நினைத்தால், அடுத்த நிமிடம் காவி உடை அணிந்து, தன்னை ‘சன்யாஸி’ என்று சொல்லிக் கொள்ளலாமா?
சோ : காவி உடை கூட அணிய வேண்டிய அவசியம் இல்லை. எத்தனையோ பேர் காவி உடை அணியாமலே, தங்களை ‘சன்யாஸி’ என்று விளம்பரப்படுத்திக் கொள்ளவில்லையா?கேள்வி : அப்படியானால் சன்யாஸம் என்பது இவ்வளவுதானா?
சோ : இன்றைய நடைமுறையைச் சொன்னேனே தவிர, அதுதான் விதிமுறை என்று சொல்லவில்லை. ஒருவர் சன்யாஸம் பெறுவது என்றால், அவருக்கு சன்யாஸம் அளிக்கிற குரு ஒருவர் வேண்டும். வீட்டில் கோபித்துக் கொண்டு போய் ‘நான் சன்யாஸி’ என்று சொல்லிக் கொண்டால், அது சன்யாஸம் ஆகாது.பெற்றோர் இருந்தால் அவர்களுடைய அனுமதியைப் பெற்று, குருவை அடைந்து, குரு முகமாகப் பல சடங்குகளைச் செய்ய வேண்டும். ஹோமம் எல்லாம் உண்டு. சன்யாஸம் அடைவதற்காக மந்திரங்கள் உண்டு. அவற்றை ஓத வேண்டும். இந்த மந்திரங்களில், முக்கியமாக ‘ப்ரைஷ’ மந்திரம் என்று ஒன்று உண்டு. ‘என்னால் எந்த ஜீவராசிக்கும் பயம் ஏற்படக் கூடாது’ என்ற பொருள் உடைய அந்த மந்த்ரம், சன்யாஸியின் விரதம் ஆகிறது.
மனிதர்கள் மட்டுமல்லாமல் செடி, கொடி, பிராணிகள், பூச்சிகள் உட்பட, எந்த ஜீவராசிக்கும் சன்யாஸியைப்பார்த்தால் ஒரு அச்ச உணர்வும் ஏற்படக் கூடாது. அஹிம்சையின் உச்ச நிலை இது.
நான் சொன்ன மாதிரி, ஹோமம் எல்லாம் செய்து, குரு முகமாக சன்யாஸம் பெறுவது ‘க்ரம சன்யாஸம்’. ஆனால், சில நேரங்களில், அல்லது இடங்களில், அது இயலாமல் போகலாம். அப்போது ‘ஆதுர சன்யாஸம்’ மேற்கொள்ளப்படும். சடங்குகளைச் சுருக்கமாகச் செய்து முடித்து, துறவு ஏற்றுக் கொள்ளப்படுகிற சன்யாஸம்.அதிஆதுர – அதாவது, ‘அத்யாதுர – சன்யாஸம்’ என்பதும் உண்டு. ‘ஆபத் சன்யாஸம்’ என்று கூறுகிறார்களே அதைப் போலத்தான் இது. ஆதிசங்கரர் சன்யாஸம் மேற்கொண்டது இவ்விதம்தான். இதிலும் கூட, ப்ரைஷ மந்திரம் சொல்லப்பட வேண்டும். அதாவது, தன்னால் எந்த ஜீவராசிக்கும் அச்சம் உண்டாகாது என்கிற விரதம் அவ்வளவு முக்கியம்.ஆதிசங்கரர் சன்யாஸம் பெறுவதற்கு அவர் தாய் அனுமதிக்கவில்லை. அவர் ஆற்றில் குளித்தபோது, ஒரு முதலை அவர் காலைப் பிடித்தது. தாய் கதறினாள். ‘தாயே! நான் சன்யாஸம் பெறுவதற்கு, இப்போது நீங்கள் அனுமதித்தால், அது எனக்கு மறுபிறவியாகும். ஆகையால், இப்பிறவியில் ஏற்பட்ட இந்தச் சோதனை, இப்படியே முடிவு பெறும்’ என்று கூறினார். தாயும் வேறு வழியின்றி அனுமதி அளிக்க, அந்தச் சிறுவயதிலேயே சங்கரர் சன்யாஸம் பெற்றார். அந்த முதலை ஒரு கந்தர்வன். துர்வாஸரை அவமதித்ததால், அவருடைய சாபத்தினால் அவன் முதலையானான்.
‘பரமசிவன் காலை நீ பிடிக்கிறபோது, உனக்குப் பழைய நிலை கிட்டும்’ என்று துர்வாஸர் கூறியிருந்தார். அதற்கு அவன் ‘முதலையாக இருக்கிறபோது, நான் எப்படி சிவனைப் பார்ப்பது?’ என்று பரிதாபமாகக் கேட்டான்.
‘சிவனே வந்து உன்னை சந்திப்பார்’ என்று கூறி அருளினார் துர்வாஸர். ஆதிசங்கரர், பரமசிவனின் அம்சம் கொண்ட அவதாரம். அதனால்தான், அவர் காலைப் பிடித்து, தன் பழைய நிலையை அந்த கந்தர்வன் பெற்றான்.
எல்லாவற்றையும் துறந்து, ஜீவராசிகளிடையே ஒரு வித்தியாசத்தையும் பார்க்காமல், ஓரிடத்திலேயே தங்காமல், பரமனை நாடுகிற பக்குவம் பெற்று, ஞான நிலையை எய்துபவர்கள் சன்யாஸிகள்.
– CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்