கேள்வி : எந்த மூடப் பழக்கவழக்கத்தைப் பற்றிக் கேட்டாலும், அதற்கு ஏதாவது ஒரு காரணம், விளக்கம் சொல்லி விடுகிறீர்கள். இந்தப் பஞ்சாங்கத்தைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்? உலகம் விஞ்ஞான ரீதியாக எவ்வளவோ முன்னேறி வருகிறபோது – நாம் மட்டும் இந்தப் பஞ்சாங்கத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறோமே? இது மூடத்தனம் இல்லையா?
சோ : பஞ்சாங்கம் என்பதை நீங்கள் சொல்வது போல, அவ்வளவு அலட்சியமாக ஒதுக்கிவிட முடியாது. அது கணித சாஸ்திரம், வான சாஸ்திரம் போன்ற விஞ்ஞான பூர்வமான விஷயங்களின் அடிப்படையில் அமைந்தது.பஞ்சாங்கம் என்றால் – ஐந்து அங்கங்கள்.நாள்; நக்ஷத்திரம்; திதி; யோகம்; கரணம் – என்ற ஐந்து அங்கங்களை விளக்கக் கூடியது பஞ்சாங்கம்.உதாரணமாக, சந்திரனுக்கும் சூரியனுக்கும் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் உள்ள தூரத்தின் அடிப்படையில் கணக்கிட்டுக் கூறப்படுவது – திதி.நக்ஷத்திரத்தைக் கூறுவதிலும் கணக்கு இருக்கிறது. ஒரு நக்ஷத்திரம், பதிமூன்று டிகிரி; 27 நக்ஷத்திரம் 360 டிகிரி.
யோகம் என்பதிலும், சூரிய, சந்திர நிலைகளின் கணக்கு வருகிறது.கரணம் என்பது ஒரு திதியில் பாதி…– இப்படி பல கணக்குகள் கூறப்படுகின்றன.இந்த மாதிரி பல கணக்குகளைக் கொண்டு, பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. வான சாஸ்திரத்திலும், கணிதத்திலும் இந்தியர்கள் எப்போதுமே முன்னணியில் இருந்திருக்கிறார்கள். உலகம் தட்டையானது என்று நினைக்கப்பட்ட காலத்தில், ஹிந்து மத நூல்கள் உலகை ‘அண்டம்’ என்று குறிப்பிடுகின்றன. பிரம்மாண்டம் என்றால், பிரம்மாவினால் படைக்கப்பட்ட அண்டம். இந்த ‘அண்டம்’ என்ற சொல்லுக்கு ‘முட்டை’ என்று பொருள்.
அதாவது, உலகம் வட்ட வடிவமானது அல்ல, முட்டை வடிவமானது என்று அந்தக் காலத்திலேயே – வேத காலத்திலேயே – இங்கு அறியப்பட்டது. அதன் பிறகு, பல ஆயிரம் ஆண்டுகள் கழித்துதான், உலகின் மற்ற நாடுகளில், உலகம் வட்ட வடிவமானது அல்ல, முட்டை வடிவம் உடையது என்று அறியப்பட்டது. இதுமட்டுமல்ல. சூரியன் பூமியைச் சுற்றிச் சுற்றி வருகிறது என்று மேலை நாடுகளில் நம்பப்பட்ட காலம் இருந்தது. அப்போதே, ஹிந்து மத நூல்களில், பூமி தன்னையும் சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது என்று எழுதப்பட்டது.
கேள்வி : இப்படியெல்லாம், ஹிந்து மத நூல்கள் கூறுகின்றன என்றால், அந்தக் கால விஞ்ஞானிகள் யாரும் பிரபலம் அடையவில்லையே?
சோ : பிரபலம் அடையவில்லை என்றால், சாதாரண மக்களிடையே பிரபலம் அடையவில்லை என்று கூறலாம். ஆனால், அறிஞர்கள், விஞ்ஞானிகள், அந்தக் கால ஹிந்து மத அறிஞர்களை மிகவும் போற்றி எழுதியிருக்கிறார்கள்.பாஸ்கராச்சார்யர், வராஹமிஹிரர், ஆர்யபட்டா போன்ற மேதைகள் வானசாஸ்திரம், கணிதம் போன்ற துறைகளில் செய்துள்ள ஆராய்ச்சிகள் இப்போதும் போற்றப்படுகின்றன. ‘பூஜ்யம்’ என்பதையே உலக கணிதத்திற்கு அளித்தது, ஹிந்து மத கணிதம்தான் என்பதும் கூட, இப்போதும் மேலைநாடுகளில் வலியுறுத்தப்படுகிறது.ஆகையால், இனி ‘பழைய பஞ்சாங்கம்’ என்று கூறினால் ‘கிண்டல் செய்துவிட்டோம்’ என்று திருப்தி அடையாதீர்கள். பஞ்சாங்கம் உயர்வானதே! ஆகையால், யாரையாவது நீங்கள் ‘பஞ்சாங்கம்’ என்று கூறினால், அவருடைய அறிவைப் பாராட்டுகிறீர்கள் என்றுதான் பொருள்.
– CHO
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்