Monday, September 25, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 12

புலிகளின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மான், அனுப்பிய ‘ரகசிய’ கப்பல்!


2002-ம் ஆண்டு, புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே சமாதான பேச்சுக்கள் துவங்கிய நாட்கள்வரை, புலிகளின் ஆயுதக் கப்பல் ஆபரேஷன், வெளிநாட்டில் இருந்து இயக்கி வைக்கப்பட்டது. கே.பி. என்று அறியப்படும் குமரன் பத்மநாதன் தலைமையில் முழு ஆபரேஷனும் இயங்கியது.

புலிகளின் அநேக வெற்றிகளின் பின்னணியில் இருந்தது, இந்தக் கப்பல்களில் சென்று இறங்கிய ஆயுதங்கள்தான். ‘ஆபரேஷன் ஜெயசிக்குறு’ என்ற இலங்கை ராணுவ நடவடிக்கையில் புலிகள் வெற்றியடைந்த போது, தளபதிகள் மத்தியில் பேசிய புலிகளின் தலைவர் பிரபாகரன், “இந்த வெற்றியின் முக்கிய காரணமே, சரியான நேரத்தில் கே.பி. அனுப்பிய ஆயுதக் கப்பல்” என்றார்.

2002-ம் ஆண்டு வரை, வெளிநாட்டில் ஆயுதங்கள் வாங்குவது முதல், அவற்றை கப்பல்களில் ஏற்றி, இலங்கை கடற்படையின் கண்களில் மண்ணைத் தூவி, வெற்றிகரமாக அனுப்பி வைத்தவர்கள் கே.பி.யின் கீழ் இயங்கிய குரூப்.

புலிகள் இயக்கத்தில் கே.பி. டிபார்ட்மென்ட் என அறியப்பட்ட இவர்கள், இயங்கிய விதம் மிக தந்திரமானது. ஆயுதக் கப்பல்களின் நடமாட்டத்தை, உளவுத்துறைகள் ட்ராக் பண்ண முடியாதபடி நடத்தியதுதான், இவர்களது வெற்றியின் ரகசியம்.

ஆயுதங்களுடன் கப்பல் ஒன்று வன்னிக்கு புறப்படுகிறது என்றால், அந்த விஷயங்களில் முற்று முழுதாக ரகசியம் காக்கப்படும். கப்பல் கிளம்பும் தேதி எது என்பதைகூட, வன்னியில் இருந்த புலிகளுக்கு அறிவிப்பதில்லை.

“கப்பலில் ஆயுதங்கள் வரப்போகின்றன” என்பது மட்டுமே வன்னியில் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலருக்கு தெரிந்திருக்கும். எந்த தேதியில் வந்து சேரும்? கப்பலின் பெயர் என்ன? போன்ற எந்த விபரங்களும், புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குகூட கே.பி.யிடம் இருந்து கூறப்பட்டதில்லை. அந்தளவு ரகசிய ஆபரேஷன் அது!

அதுதான், ஆயுதங்கள் அடிபடாமல் போய் சேர்ந்தன.

ஆயுதங்களுடன் செல்லும் கப்பலுக்கும், வன்னியில் இருந்த புலிகளுக்கும் இடையே கம்யூனிகேஷன் தொடர்புகள் ஏதும் இல்லாது பார்த்துக் கொண்டார்கள். கப்பல் நடுக்கடலில் செல்லும்போது, கப்பலின் கேப்டனுக்கும், தாய்லாந்தில் இருந்த கே.பி.க்கும் மட்டுமே கம்யூனிகேஷன் தொடர்பு இருக்கும்.

கப்பல் இலங்கை கடல் பகுதிக்குள் பத்திரமாக சென்றவுடன், கேப்டன், தாய்லாந்தின் ஒரு நகரத்தில் இருந்த கே.பி.க்கு அறிவிப்பார். கே.பி. மற்றொரு நகரத்துக்கு சென்று, மற்றொரு போன் மூலம், வன்னியில் இருந்த குமாரவேலுக்கு அதை தெரியப்படுத்துவார். குமாரவேல் பிரபாகரனை நேரில் சந்தித்து விபரம் கூறுவார்.

அதன்பின் பிரபாகரன், கடல் புலிகள் பிரிவின் தலைவர் சூசையை அழைத்து, “கப்பல் விரைவில் வரும்” என்று கூறி, கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்க, கடல் புலிகளின் படகுகளை ஏற்பாடு செய்ய சொல்வார். கடல் புலிகள் கப்பலுக்கு அருகே படகுகளில் செல்லும்போதுதான், வந்த கப்பலுக்கு என்ன பெயர் என்ற விபரம்கூட தெரியவரும்.

இப்படி கே.பி. டிபார்ட்மென்ட்-குமாரவேல்-பிரபாகரன் என்ற காம்பினேஷனில்தான், புலிகளின் வெற்றிகளின் பின்னணியில் இருந்த ஆயுதங்கள், வன்னி வரை போய்ச் சேர்ந்தன.

புலிகளின் இந்த ஆயுதக் கப்பல் ஆபரேஷனைதான், கடல் புலிகள் பிரிவின் தளபதி சூசை தமது பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று விரும்பினார். அதற்கு காரணம், கே.பி. அனுப்பும் கப்பல்களை செலுத்திய மாலுமிகளில் அநேகர், கடல் புலிகள் பிரிவில் இருந்து கே.பி.-யிடம் அனுப்பி வைக்கப்பட்டவர்களே!

புலிகளுக்கு சொந்தமான கப்பல்களின் ஆரம்ப கால வர்த்தக நடவடிக்கைகளுக்கு புலிகள் இயக்கத்தைச் சேராத வெளி மாலுமிகள் பயன்படுத்தப் பட்டனர். அதன்பின், ஆயுதங்களை ஏற்றி அனுப்பும் வேலைகள் அதிகரித்தன. ரகசியமான அந்த வேலைக்கு, வெளி ஆட்களை பயன்படுத்த விரும்பவில்லை கே.பி.

இது பற்றி புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் விவாதித்ததில், கப்பல்களுக்கான மாலுமிகளாக புலிகள் இயக்கத்தில் இருப்பவர்களை பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. ஆழ்கடல் கப்பல் ஆபரேஷனுக்கு தகுதியான நபர்களை இலங்கையில் புலிகள் இயக்கத்தில் இருந்து தேர்ந்தெடுத்து, கே.பி.-யிடம் அனுப்பி வைக்கும் நடைமுறை துவங்கியது.

அப்படி அனுப்பி வைக்கப்பட்ட ஆட்களுக்கு, வெளிநாடுகளில் கே.பி. ஏற்பாடு செய்த இடங்களில் மாலுமி பயிற்சிகள் வழங்கப்பட்டன.

கே.பி.-யிடம் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட புலிகளில், பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களும் இருந்தாலும், கடல் புலிகள் பிரிவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டவர்களே அதிகம். இந்த ஆபரேஷன் அதி ரகசியமானது என்பதால், கப்பலில் ஏற்றப்பட்ட மாலுமிகளில் ‘ரகசியம் தெரிந்தவர்கள்’ (சில கேப்டன்கள் உட்பட) தரையிறங்க அனுமதிக்கப்படுவதில்லை.

ஆயுதக் கப்பல் ரகசியம் தெரிந்த சிலரை 5 வருடங்கள் வரை கப்பலில் இருந்து இறங்கவே கே.பி. அனுமதிக்காத சம்பவங்களும் இருந்தன. ரகசியம் தெரிந்தவர்கள் புலிகள் இயக்கத்தவர் என்பதால், அவர்களும், தரையிறங்க வேண்டும் என்று அடம் பிடிப்பதில்லை.

இந்த இடத்தில் மற்றொரு சிறிய சம்பவத்தையும் சொல்லி விடலாம்.

2000-ம் ஆண்டு, புலிகளின் கேப்டன் ஒருவர், தரையிறங்க அனுமதி கோரினார். வன்னியில் கடல்புலிகளின் தளபதி சூசையிடம் பேசிய கே.பி., குறிப்பிட்ட கேப்டனை வன்னிப் பகுதிக்கு உள்ளேயே சகல வசதிகளுடனும் வைத்திருந்துவிட்டு, கப்பல் அடுத்த தடவை வரும்போது ஏற்றி விடுமாறு ஏற்பாடு செய்திருந்தார்.

கேப்டனும், சூசையின் பாதுகாப்பில் தரையில் இறக்கி விடப்பட்டார். குறிப்பிட்ட கேப்டனின் குடும்பம், அப்போது இந்தியாவில் வசித்தது.

ஆனால், அதன்பின் அவர் சூசையிடம் என்ன டீல் வைத்துக் கொண்டாரோ, படகு ஒன்றில் ஏறி குடும்பத்திரைப் பார்ப்பதற்கு இந்தியா சென்று விட்டார். அங்கே இந்திய உளவுத்துறை றோ-விடம் சிக்கிக் கொண்டார். அவர் மூலமாக, கே.பி. டிபார்ட்மென்டின் ரகசியங்கள் சில றோ-விடம் போய் சேர்ந்தது. அதன்பின் றோ என்ன செய்தது என்பதை, தொடரின் வேறு பகுதியில் தருகிறோம்.

நாம் சொல்லவந்த விஷயம் என்னவென்றால், புலிகளின் கப்பல் ஒன்று ஆயுதங்களுடன் வெற்றிகரமாக இலங்கை கரையை அடையும்போது, அதன் மாலுமிகளில் 80% பேர், கடல் புலிகள் பிரிவில் இருந்து சென்றவர்களாக இருப்பார்கள்.

இந்த இடத்தில்தான், ஈகோ யுத்தம் துவங்கியது.

கடல் புலிகளின் தளபதி சூசையின் ஆட்கள், வெளிநாடு சென்றதும், கே.பி. டிப்பார்ட்மென்ட் ஆட்களாக மாறினார்கள். ரகசியம் காக்கப்பட வேண்டிய ஆபரேஷன் என்பதால், அவர்களது நடவடிக்கைகள் கடல் புலிகளுக்கு தெரியவராது.

திடீரென ஒருநாள், புலிகளின் ஆயுதக் கப்பலை செலுத்தும் மாலுமிகளாக அவர்களை, ஆயுதங்களை இறக்குவதற்கு செல்லும் மற்றைய கடல் புலிகள் (அவர்களது பழைய சகாக்கள்) பார்ப்பார்கள். இந்தக் கதைகள் சூசை வரை செல்லும். கடல் புலிகளுக்குள் ஈகோ தலையெடுத்தது.

கடல் புலிகளில் திறமைசாலிகள் சிலர், “கே.பி. டிபார்ட்மென்டுக்கு போக விரும்புகிறேன்” என்று பிரபாகரனுக்கு வேண்டுகோள் கடிதங்களை அனுப்ப துவங்க, பொறியாக இருந்த ஈகோ, தீயாக பற்றிக் கொண்டது.

இந்த விவகாரம் பெரிதாகவே, புலிகளின் தலைவர் பிரபாகரன் கண்டிப்பான உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். “கரையில் நடப்பவை கப்பல் ஆட்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அதேபோல கப்பலில் நடப்பவை கரையில் உள்ள ஆட்களுக்கு தெரியக்கூடாது” என்பதே அந்த உத்தரவு. சில நாட்களுக்கு இந்த உத்தரவு நேர்த்தியாக கடைப்பிடிக்கப்பட்டது. நாளடைவில், மீண்டும் பழைய நிலையே திரும்பிவிட்டது.

அதையடுத்தே, ஆயுதக் கப்பல் ஆபரேஷனை தமது பிரிவின் வசம் எடுத்துக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார் கடல் புலிகளின் தளபதி சூசை. அதற்காக சில ‘உள்ளடி வேலைகள்’ வன்னியில் நடைபெற்றன. சூசையின் முயற்சி வெற்றி பெற்றது. 2002-ம் ஆண்டு சமாதான காலத்தோடு, ஆயுதக் கப்பல் ஆபரேஷன், கே.பி. டிபார்ட்மென்டில் இருந்து கடல் புலிகளுக்கு கைமாறியது.

அதற்கான ‘உள்ளடி வேலைகளின்’ பின் விழத் துவங்கியதுதான், அடி-மேல்-அடி.

வன்னியில் இறுதி யுத்தம் துவங்கியபோது, புலிகளுக்கு ஆயுதங்கள் தேவைப்பட்டன. கடல் புலிகளால் இயக்கப்பட்ட ஆயுதக் கப்பல்கள் ஒவ்வொன்றாக வருவதும், நடுக்கடலில் அடி வாங்குவதுமாக இருந்தன.

போதிய ஆயுதங்கள் இல்லாமல், மன்னார் பகுதியில் இருந்து புலிகள் பின்வாங்கத் துவங்கினார்கள். “அவசரமாக மேலதிக ஆயுதங்கள் வேண்டும்” என்று யுத்த கள முனையில் இருந்து தளபதிகள் தகவல் மேல் தகவலாக பிரபாகரனுக்கு அனுப்ப, பிரபாகரன் சூசையிடம் சொல்ல, கடல் புலிகளின் ஒவ்வொரு கப்பலும், வெளிநாட்டில் இருந்து ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு புறப்படும்.

பாதி வழியில், சொல்லி வைத்தாற்போல இலங்கை கடற்படையால் தாக்கப்படும். கப்பல் எரிந்து போகும். மில்லியன் கணக்கான டாலர் பெறுமதியான ஆயுதங்கள் கடலடியே போய்ச் சேரும்.

யுத்த முனையில், மன்னாரில் துவங்கிய புலிகளின் பின்வாங்கல் (தந்திரோபாய பின்வாங்கல் என்றார்கள் சில புத்திசாலி ஆய்வாளர்கள்), மன்னார் மாவட்டத்தை முழுமையாக இழந்து, அடுத்து, கிளிநொச்சி மாவட்டத்தையும் இழந்து, முல்லைத் தீவு மாவட்டத்தின் பகுதிகளையும் கைவிட்டு பின்வாங்கிக் கொண்டிருக்க…

“ஆயுதங்களை தாருங்கள். இல்லாவிட்டால் பின்வாங்குவதே ஒரே வழி” என்று புலிகளின் தளபதிகள் அபாய எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருக்க….

கடல் புலிகளின் கப்பல்கள், ஆயுதங்களுடன் கடலில மூழ்கிக் கொண்டிருந்தன.

ஒன்று.. இரண்டு.. மூன்று என்று துவங்கி, பத்துக்கு மேற்பட்ட கப்பல்கள் கடலடியே போயின!

புலிகள் யுத்தத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிக் கொண்டிருக்க, வெளிநாட்டு தமிழர்களின் பல மில்லியன் டாலர் பணத்தில் வாங்கப்பட்ட ஆயுதங்கள், புலிகளின் கப்பல்களோடு கடல் அடியே புதைந்தன. அது மட்டுமல்ல, அத்துடன் 30 வருட கால ஆயுதப் போராட்டமும், கடல் அடியே போய்ச் சேர்ந்தது.

வன்னியின் பெரிய நிலப் பகுதியை தமது அதிகாரத்தில் வைத்திருந்த புலிகள், கடல் புலிகளினால் இயக்கப்பட்ட இறுதி ஆயுதக் கப்பல் நடுக் கடலில் அடிபட்ட நேரத்தில், புதுக்குடியிருப்பு, முள்ளிவாய்க்கால், மற்றும் அதைச் சுற்றியுள்ள சிறிய பகுதிக்குள் வந்து சேர்ந்திருந்தனர்.

யுத்தத்தில் ஏற்பட்ட தொடர் தோல்வி, புலிகளின் தளபதிகளிடையே புயலை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், ஆயுதங்கள் இல்லாத விவகாரம் பற்றி தளபதிகளுக்கு நன்றாகவே புரிந்திருந்தது.

புதுக்குடியிருப்பில், பிரபாகரனும், தளபதிகளும் கலந்துகொண்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில், காரசார விமர்சனங்கள் தளபதிகளால் முன்வைக்கப்பட்டன.

“கடல் புலிகளின் கப்பல் ஆபரேஷன் காரணமாக ஏற்பட்ட நிலையே இந்த தொடர் தோல்விகள்” என மிக காரசாரமாக, கடல் புலிகளின் தளபதி சூசையை விமர்சித்த தளபதி யார் தெரியுமா? புலிகளின் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான்!

இந்த இடத்தில்தான், ஒரு திருப்பம் ஏற்பட்டது.

“ஆயுதங்களை கொண்டுவந்து சேர்க்க எங்களால் (கடல் புலிகள்) முடியாது என்றால், நீங்கள் அதை வெற்றிகரமாக செய்து காட்டலாமே” என்று சவால் விட்டார் சூசை.

அதற்கு பொட்டு அம்மான், “எங்களிடம் (உளவுப் பிரிவு) பொறுப்பை கொடுத்திருந்தால், ஆயுதங்களை கொண்டு வந்திருப்போம்” என்று பதிலுக்கு எகிற, “முடிந்தால், செய்து காட்டுங்கள்” என்றார் சூசை.

யுத்தம் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்ட நேரத்தில், இதற்கு அனுமதி கொடுத்தார் பிரபாகரன். அதையடுத்து, சோலோ முயற்சி ஒன்றில் இறங்கினார் உளவுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான்.

வெளிநாடுகளில் இயங்கிய புலிகளின் உளவுப் பிரிவின் ஆட்கள் களத்தில் இறங்கினர். அதுவரை நடந்த கடல் புலிகளின் தோல்விகரமான கப்பல் ஆபரேஷனுக்கு தலைகீழான திட்டம் ஒன்றை செயல்படுத்தினார் பொட்டு அம்மான்.

அவரது ஆட்கள் வன்னிக்கு அனுப்பவதற்காக (உளவுப் பிரிவின் பாவனைக்கு) சில பொருட்களை வைத்திருந்தார்கள். அந்தப் பொருட்களை ஒரு கப்பல் மூலம் பத்திரமாக கொண்டுவந்து காட்டுவதே பொட்டு அம்மானின் திட்டம்.

உளவுப் பிரிவின் பொருட்களை ஏற்றுவதற்கு கார்கோ கப்பல் ஒன்றை பயன்படுத்தாமல், பெரிய மீன்பிடி கப்பல் ஒன்றை லீஸ் செய்தார்கள் அவரது ஆட்கள். அந்த மீன்படி கப்பலில் ஏற்றப்பட்டன பொருட்கள். கப்பலை செலுத்துவதற்கு கடல் புலிகள் மாலுமிகள் யாரையும் பயன்படுத்தாமல், இந்தோனேசியாவைச் சேர்ந்த மாலுமிகள் பணிக்கு அமர்த்தப் பட்டனர்.

இந்தோனேசியா மாலுமிகளுடன், பொட்டம்மானின் நம்பிக்கைக்குரிய, புலிகளின் உளவுப் பிரிவைச் சேர்ந்த ஒரேயொரு நபர் மட்டும் ஏறிக் கொண்டார்.

அடுத்து செய்ததுதான் அட்டகாச வேலை.

கே.பி. வெற்றிகரமாக ஆயுதங்கள் அனுப்பியபோது, தொலைத் தொடர்பில் ஜாக்கிரதையாக இருந்தார் என்பதை புரிந்து கொண்ட பொட்டு அம்மான், அதே பாணியைப் பின்பற்றினார். இந்தோனேசிய கப்பலில் ஏறிய உளவுப் பிரிவின் நபருக்கு, தம்முடன் தொடர்பு கொள்ள கூடாது என உத்தரவிட்டார். கப்பலில் இருப்பவர்கள் தொடர்பு கொள்வதற்கு, புலிகள் இருந்த வன்னிப் பகுதிக்கு வெளியே கம்யூனிகேஷன் சென்டர் ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த தொடர்பு மையம் எங்கே அமைக்கப்பட்டது தெரியுமா? கனடாவில்!

தொடர்பு சாதனங்கள் எவை தெரியுமா? 20 சட்டலைட் செல் போன்கள்!

ரகசிய கப்பல் போக்குவரத்தில் யாராலும் ஊகிக்க முடியாத உத்தி அது. கனடாவில் இருந்த ஆபரேஷன் சென்டர் நபரிடம் 10 வெவ்வேறு இலக்கமுடைய சட்டலைட் செல்போன்கள் கொடுக்கப்பட்டன. கப்பலில் 10 சட்டலைட் செல்போன்கள் ஏற்றப்பட்டன.
வெவ்வேறு இலக்கங்களில் மாறிமாறி பேசியபடி, கப்பல் இலங்கையை நோக்கி நகர்ந்தது.

ஒரே செல்போன் தொடர்ச்சியாக ஒரே இடத்துக்கு பேசவில்லை என்பதால், வெளிநாட்டு உளவுத்துறைகள் எதுவும், உடனடியாக இவர்களது தொடர்புகளை ட்ராக்-டவுன் செய்யவில்லை.

தவிர, சில சமயங்களில் அதே செல்போன்களில் பேசியவர்கள், இந்தோனேசிய மாலுமிகள். அவர்கள், இந்தோனேசியாவில் உள்ள உறவினர்களுடன் பேசியது, ‘ஜாவானீஸ்’ மொழியில். இந்தோனேசிய, மலேசிய ரோந்துப் படகுகளுடன் ரேடியோ தொடர்பு கொண்டது, ‘பாஷா இன்டோனேசியன்’ மொழியில்! (இது மலாய் மொழியின் சற்றே மாறிய வடிவம். மலேசிய கடற்படை அதிகாரிகள் புரிந்து கொள்வார்கள்)

யாராலும் ஊகிக்க முடியாத கப்பல் ஆபரேஷன் அது. அதற்குள் இருந்தவைதான், வன்னியில் புலிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்ட இறுதி செட் பொருட்கள்.

பொட்டு அம்மானின் கப்பலுக்கும், அதில் ஏற்றப்பட்ட பொருட்களுக்கும் என்ன நடந்தது? அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.

தொடரும்….

Source
nadunadapu  

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :