Monday, September 25, 2017

Keerthivasan

ஈழப் போரின் இறுதி நாட்கள் – 16

புலிகளுக்காக லண்டனில் அல்ஜீரியரிடம் ஆயுதம் வாங்கிய ‘அமைச்சர்’!


விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எந்த தடங்கலும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆயுதக் கப்பல்கள் வந்தபோது கிடைத்த பல வெற்றிகள், ஆயுத சப்ளை ட்ரை-அவுட் ஆனபோது மாயமாக மறைந்து போயின. 2002-ம் ஆண்டு, ஆயுத சப்ளை கைமாறியது. அதன்பின் எந்தவொரு தாக்குதலிலும் புலிகள் ஜெயித்து புதிய இடங்களை கைப்பற்றவில்லை.

ஏற்கனவே 2002-க்கு முன் கிடைத்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு, இலங்கை ராணுவம் முன்னேறுவதை சிறிது காலம் தடுக்க முடிந்தது. அதன்பின் தொடர்ச்சியான பின்வாங்கி, (தேசிய வரைவிலக்கணத்தில், ‘தந்திரோபாய பின்வாங்கல்’) முள்ளிவாய்க்காலில் அனைத்தும் முடிந்து போனது.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் 2002-ல் ஆயுத சப்ளையை தெரியாமல் கைமாற்றி விட்டார். என்ன நடக்கிறது என்பதை ரியலைஸ் பண்ணும் முன், வெள்ளம் தலைக்குமேல் போய்விட்டது” என்றும் ஒரு தரப்பு சொல்கிறது. அது அவ்வளவு சரியான கருத்து அல்ல. காரணம், அதற்கு முன்பும் சில தடவைகள் வேறு ஆட்களை வைத்து செய்ய முயன்ற ஆயுத இறக்குமதி முயற்சிகள், செம அடி வாங்கியிருந்தன.

2002-ம் ஆண்டு ஆயுத சப்ளை இலாகாவையும், கப்பல்களையும் கே.பி.-யிடம் இருந்து கைமாற்றுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, மற்றொருவரை வைத்து செய்ய முயன்ற ஆயுத இறக்குமதி பற்றி பார்க்கலாம். இந்த விவகாரத்தை ஏன் பிரஸ்தாபிக்க வேண்டியுள்ளது என்றால், “விஷயம் தெரியாதவர்கள் ஆயுத இறக்குமதி செய்ய முயன்றால், சொதப்பலில் முடியும்” என்பதை பிரபாகரன், ‘ஹார்டு வேயில்’ பல வருடங்களுக்கு முன்பே அனுபவ ரீதியாக அனுபவித்தவர் என்பதை காட்டுவதற்காகவே!

அப்படியிருந்தும், 2002-ல் ஆயுத சப்ளையை முழுமையாக கைமாற்றி விட்டதை, என்னவென்று சொல்வது? நாகரீகமாக சொல்வதானால், விதியின் விளையாட்டு என்று வைத்துக் கொள்வோம்.

நாம் கூறும் சம்பவம் துவங்கியது தமிழகத்தில். 1980-களின் நடுப்பகுதியில். எம்.ஜி.ஆர். ஆட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. அதுவரை புலிகளிடம் அதிகமாக இருந்தவை, இந்திய அரசால் ரகசியமாக கொடுக்கப்பட்ட ஏ.கே-47 ரக துப்பாக்கிகள்தான். இந்திய அரசே, தமது ராணுவத்தில் போட்டு அடித்து, அடிமாடாக கொடுத்த, பழைய துப்பாக்கிகள்.

அப்படியான நிலையில், தோளில் வைத்து டாங்கிகளையே சுடக்கூடிய புத்தம்புதிய ஆர்.பி.ஜி. (RPG – Rocket Propelled Grenade) ரக துப்பாக்கிகள் லெபனானில் வைத்து கே.பி.-யால் வாங்கப்பட்டன. அவற்றை கார்கோ கப்பல் ஒன்றில் ஏற்றி அனுப்பும் ஏற்பாடுகளும் கே.பி.யால் செய்யப்பட்டன.

அந்த நாட்களில், புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட, பல தளபதிகள் தமிழகத்தில்தான் தங்கியிருந்தார்கள். இதனால், ஆயுதக் கப்பலை இந்தியாவுக்கு கொண்டுவருவது என்றும், அதன்பின் படகுகள் மூலம் வேதாரண்யத்தில் இருந்து இலங்கை கொண்டு செல்வது என்றுமே திட்டமிடப்பட்டது.

லெபனானில் பெறப்பட்ட ஆயுதங்கள், பெரிய கார்கோ கண்டெயினர் (40 அடி கண்டெயினர்) ஒன்றில் ஏற்றப்பட்டு, அவற்றுக்கு மேல் மறைப்பு ஒன்று போடப்பட்டது. அதன்மேல் ஒரு பழைய பிரிண்டிங் மெஷின் ஏற்றப்பட்டது. இந்த 40 அடி கண்டெயினர், போர்ட் ஆஃப் பெய்ரூட் துறைமுகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

போர்ட் ஆஃப் பெய்ரூட் துறைமுகம், பெய்ரூட்டின் கடற்கரை (மெடிட்டரேனியன் கடல்) ஓரமாக, செயின்ட் ஜோர்ஜ் பேயின் (Saint George Bay) கிழக்கு பகுதியில் உள்ளது. இங்கிருந்து கார்கோ கப்பல்கள், ட்ரான்ஸ் ஷிப்மென்ட் கண்டெயினர்களுடன் இந்தியா செல்வது வழக்கம். கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்பட்ட நேரத்தில், கே.பி. அங்கிருந்தார். கப்பல் சென்னை துறைமுகத்தை நோக்கி புறப்பட்டது.

அதன்பின் விமானம் மூலம் புறப்பட்ட கே.பி., சென்னை வந்தடைந்தார்.

கப்பல் சென்னை துறைமுகத்தை அடையும் முன், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆருடன் அவரது ராமாவாரம் தோட்டத்தில் சந்திப்பு ஒன்று நடந்தது. பிரபாகரனும், கே.பி.-யும் எம்.ஜி.ஆரை சந்தித்தனர். கப்பலில் கண்டெயினர் ஒன்று வருகிறது என்ற விஷயம் எம்.ஜி.ஆருக்கு சொல்லப்பட்டது.

“கண்டெயினரை திறந்தவுடன், பழைய பிரிண்டிங் மெஷின் மட்டுமே தெரியும்” என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லியபோது, அவர் விஷயத்தை புரிந்து கொண்டார். ஒரு சிரிப்புடன், அப்போதைய தமிழக தலைமைச் செயலக அதிகாரி ஒருவரை போனில் அழைத்து, “நமக்கு வேண்டியவர்களுக்கு பிரிண்டிங் மெஷின் ஒன்று கப்பலில் வருகிறது. அவர்கள் உங்களிடம் விபரம் சொல்வார்கள். கிளியர் பண்ண ஏற்பாடு செய்யுங்க” என்றார்.

சந்திப்பு முடிந்து புறப்படும்போது எம்.ஜி.ஆர்., “உங்களுடைய ஆயுதங்கள் ஒவ்வொரு தடவையும் வரும்போது, அதில் உள்ள ஆயுதங்களில் ஒன்றை எனக்கு கொடுத்து விடுங்கள். ஞாபகார்த்தமாக வைத்திருக்க வேண்டும்” என்றார்.

சென்னை துறைமுகத்தில் கண்டெயினர் எவ்வித சிக்கலும் இன்றி இறக்கப்பட்டது. ட்ரக் ட்ரெயிலர் ஒன்றில் ஏற்றப்பட்டது.

பிரபாகரன் அப்போது தங்கியிருந்த வீடு, திருவான்மியூர் அருகே கடற்கரை ஓரமாக இருந்தது. வீட்டைச் சுற்றி பெரிய கம்பவுண்ட் மற்றும் இடவசதி உடைய தனி வீடு அது. வீட்டின் கம்பவுண்டுக்கு உள்ளே கண்டெயினர் கொண்டுவந்து திறக்கப்பட்டது.

புலிகள் இயக்கத்துக்கு முதல் தடவை ஒரு கண்டெயினரில் ஆயுதங்கள் வந்தது அப்போதுதான். பிரபாகரன் உட்பட, அனைவருக்கும் த்ரில்.

எல்லாமே சரியாக முடிந்தபின் பிரபாகரன், மீண்டும் ராமாவாரம் தோட்டம் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்து, நன்றி தெரிவித்ததுடன், அவர் கேட்டபடியே, ஞாபகார்த்தமாக புத்தம்புதிய ஏ.கே.-47 துப்பாக்கி ஒன்றையும் கொடுத்துவிட்டு வந்தார். (ஆர்.பி.ஜி. கொடுக்கவில்லை)

இந்த விவகாரம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குள் ஆயுதம் இறக்கி பெயரை தட்டிச் செல்லும் ஆசையை சிலருக்கு ஏற்படுத்தியது. அதில் முக்கியமானவர், சங்கர். அவரும் அப்போது சென்னையில்தான் தங்கியிருந்தார்.

சங்கரின் நிஜப் பெயர் சொர்ணலிங்கம், பிரபாகரனின் ஸ்கூல்மேட். இளமைக் கால நண்பர். கனடாவில் சிறிதுகாலம் வசித்தபோது, ஏர்-கனடாவின் மொன்ட்ரியல் மெயின்டெனென்ஸ் ஹாங்கரில் பணிபுரிந்தவர்.

ஏர்-கனடா, பிரெஞ்ச் தயாரிப்பு ஏர்-பஸ் விமானங்களின் திசையில் போவதற்கு முந்திய காலம் அது. மொன்ட்ரியல் ஹாங்கரில் அப்போதெல்லாம் DC-9 மற்றும் 727 விமானங்களுக்கே அதிகமாக மெயின்டெனென்ஸ் ஒர்க் செய்து கொண்டிருந்தார்கள். (இந்த இரு ரகங்களையும் ஏர்-கனடா 1990-களின் ஆரம்பத்திலேயே தலைமுழுகி விட்டது) சங்கர் பணிபுரிந்தது, DC-9 ராஸ்டரில்.

1983-ல் ஏர்-கனடா வேலையை உதறிவிட்டு, சென்னை வந்த சங்கர், தமது இளமைக்கால நண்பர் பிரபாகரனைச் சந்தித்து, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். வெளிநாட்டில் இருந்து வந்தவர் மற்றும், பிரபாகரனின் இளமைக்கால நண்பர் என்பதால், இயக்கத்தில் இணைந்த நாளில் இருந்தே சங்கருக்கு முக்கியத்துவம் இருந்தது.

இந்த சங்கருக்குதான், ஆயுதம் இறக்கும் ஆசை வந்தது.

அந்த நாட்களில், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு சென்னை அடையாறில் அரசியல் அலுவலகம் ஒன்று இருந்தது. ஆன்டன் பாலசிங்கம், பேபி சுப்ரமணியம் போன்றவர்கள் அந்த அலுவலகத்தில் இருந்து செயல்பட்டனர். யாரும் வந்து போகக்கூடிய இடம் அது. அதைத் தவிர மற்றொரு அலுவலகமும் இருந்தது. அங்கே வெளியாட்களுக்கு அனுமதி இல்லை.

திருவான்மியூரில் இயங்கிய அந்த அலுவலகத்தை அப்போது எம்.ஓ. (மிலிட்டரி ஆபீஸ்) என்று சொல்வார்கள். மனோ மாஸ்டர் அந்த அலுவலகத்துக்கு பொறுப்பாளராக இருந்தார். சங்கர் அதிகம் தென்படுவது அங்கேதான்.

ஆயுதம் இறக்கும் ஆசை வந்தவுடன், சங்கர் அங்கிருந்து தமக்கு நெருக்கமானவர்களை தொடர்பு கொண்டார். அவர் முக்கியமாக தொடர்பு கொண்டது, லண்டனில் இருந்த இருவரை. அந்த இருவரில் ஒருவர் தற்போது உயிருடன் இல்லை. மற்றையவர் இப்போதும் பிரிட்டனில்தான் உள்ளார். அவர் தற்போது, நாடு கடந்த தமிழீழ அரசு என்ற அமைப்பின் முன்னணி பிரமுகராக உள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசு என்பது, உருத்திரகுமார் தலைமையில், அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஒரு அமைப்பு. அதில் விவசாய துறையில் இருந்து, விண்வெளி துறை வரை, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தைவிட அதிக எண்ணிக்கையில் அமைச்சர்கள் உள்ளார்கள். நாம் குறிப்பிடும் நபரும், ‘பிரதமர்’ உருத்திரகுமாரின் அமைச்சரவையில் ஒருவர்.

சென்னையில் இருந்த சங்கர் தமது ஆயுதம் இறக்கும் ஆசையை இவர்களிடம் சொன்னதில், இவர்கள் லண்டனில் நாலைந்து இடங்களில் விசாரித்து ஒரு கனெக்ஷனை பிடித்து விட்டார்கள். அந்த நபர் ஒரு அல்ஜீரிய பிரஜை. “ஆயுதங்கள்தானே.. பேஷா இறக்கிடலாம்” என்றார் அவர்.

ஆயுத வியாபார தொடர்பு இவ்வளவு சுலபமாக கிடைத்ததில் அமைச்சருக்கு பேரானந்தம். “இதைத்தானா ஏதோ பெரிய விஷயம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்? ஆயுதம் சப்ளை செய்ய அருமையான ஆள் கைவசம் உள்ளார். உடனே புறப்பட்டு வந்தால், ஆயுதங்களை அள்ளிவிடலாம்” என்று சங்கருக்கு தகவல் கொடுத்தார் அமைச்சர்.

சங்கர் கனடாவில் இருந்து வந்தவர் என்பதால், லண்டன் செல்வதில் சிக்கல் ஏதும் இல்லை. பிரபாகரனிடம் விஷயத்தைக் கூறியதில்,

அவரும், இவரை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். லண்டனில், தமது அல்ஜீரிய தொடர்பாளரிடம் சங்கரை அழைத்துச் சென்றார் அமைச்சர். அந்த அல்ஜீரியரோ, இவர்கள் அனைவரையும் விட கெட்டிக்காரர். இவர்கள் எந்த ரக ஆயுதம் கேட்டாலும், அடுத்த இரண்டு மணி நேரத்திலேயே காட்டிவிடுவார். ஒரேயொரு விஷயம், ஆயுதத்தை போட்டோவில் காட்டுவார்.

போட்டோவில் காண்பிக்கும் ஆயுதம் பற்றி, அந்த ஆயுதத்தை தயாரித்தவருக்கே தெரியாத புள்ளிவிபரம் எல்லாம் சொல்லி அசத்தினார் அவர்.

அவரது ஆயுத டெமொன்ஸ்ட்ரேஷன் இவர்களுக்கு நன்றாக பிடித்துப் போனது. லண்டனில் இருந்தே பிரபாகரனுடன் தொடர்பு கொண்ட சங்கர் விபரங்களை கூறினார். கே.பி. லெபனானில் இருந்து பெற்றுக் கொடுத்த ஆயுதங்களின் விலைப் பட்டியலை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதுவும் போய் சேர்ந்தது.

விலை பேசும் படலம் ஆரம்பமானது. சங்கருக்கும், அமைச்சருக்கும், கே.பி. ஏற்கனவே ஆயுதம் வாங்கிய விலை, பிரபாகரன் அனுப்பிய பட்டியலில் இருந்து தெரியும் என்பதால், அதை மையமாக வைத்தே விலை பேச திட்டமிட்டார்கள். ஆனால் அல்ஜீரியாக்காரர் சொன்ன விலை, இவர்களை புளகாங்கிதம் அடைய வைத்தது.

உடனே சங்கர், பிரபாகரனை தொடர்பு கொண்டார். “கே.பி. ஆயுதங்களுக்கு லெபனானில் அதிக விலை கொடுத்து ஏமாந்து விட்டார். அவர் 1800 அமெரிக்க டாலருக்கு வாங்கிய ஆர்.பி.ஜி.-யை, இங்கே ஒருவர் 1675 டாலருக்கு கொடுக்க ரெடியாக உள்ளார்” என்றார்.

ஆயுதங்களை வாங்கி அனுப்புமாறு பிரபாகரன் உத்தரவிட்டார்.

அமைச்சரும், சங்கருமாக அல்ஜீரியாக்காரருடன் டீல் பேசி முடித்தார்கள். மொத்தம் 1.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்ஸ் டீல். அதில் 1 மில்லியன் பவுண்ட்ஸ் முன்பணம் கொடுத்துவிட வேண்டும். புலிகள், தமது சொந்த கப்பலை பாதி தூரம் கொண்டுவர வேண்டும்.

செங்கடலில், சூயஸ் கால்வாய் இணைப்பு ஏற்படும் Gulf of Suez பகுதிக்கு புலிகளின் கப்பல் வந்து காத்திருக்க வேண்டும். அல்ஜீரியாக்காரரின் ஆயுதக் கப்பல் அங்கே வந்து சேரும். கடலில் வைத்தே ஆயுதங்களை அந்தக் கப்பலில் இருந்து இந்தக் கப்பலுக்கு மாற்றி விடுவார்கள்.


Gulf of Suez பகுதிக்கு ஆயுதக் கப்பல் வந்து, ஆயுதங்களை சரிபார்த்த உடன், மீதி அரை மில்லியன் பவுண்ட்ஸை லண்டனில் வைத்து ட்ரவலர்ஸ் செக்காக கொடுத்துவிட வேண்டும். அந்த பணம் கிடைத்த பின்தான், புலிகளின் கப்பலில் ஆயுதங்கள் ஏற்றப்படும். இதுதான் டீல்.

பிரபாகரனின் ஒப்புதலும் கிடைக்கவே, முன்பணம் 1 மில்லியன் அல்ஜீரியாக்காரருக்கு கொடுக்கப்பட்டது. மீதி, அரை மில்லியன் பவுண்ட்ஸை ட்ரவலர்ஸ் செக்காக எடுத்து, அமைச்சர் தமது லண்டன் வீட்டில் வைத்துக் கொண்டார்.

செங்கடலுக்கு கப்பலை கொண்டுவரும் ஏற்பாடுகளை செய்ய, சங்கர் மீண்டும் சென்னை திரும்பினார்.

புலிகளின் கப்பல் போக்குவரத்து அப்போது, கே.பி.-யின் வசம் இருந்தது. அதனால், சங்கர் கேட்டபடி கப்பல் ஒன்றை அனுப்பி வைக்குமாறு பிரபாகரன் கே.பி.-யிடம் சொன்னார்.

டீலை இதுவரை முடித்துவிட்டு, சென்னையில் தங்கிவிட சங்கர் விரும்பவில்லை. எனவே அந்தக் கப்பலில் தாமும் செல்ல வேண்டும் என்றார்.

புலிகளின் திருவான்மியூர் எம்.ஓ. அலுவலகத்தில் பொறுப்பாளராக இருந்த மனோ மாஸ்டர் பற்றி ஏற்கனவே குறிப்பிட்டோம். அவர்தான் அந்த நாட்களில், பிரபாகரனுக்கு அருகே டெக்னிகல் ஆலோசகர் போல செயல்பட்டவர். “சங்கரும் கப்பலில் போவதுதான் நல்லது” என்று கூறிய மனோ மாஸ்டர், “நானும் சங்கருடன் போகிறேன்” என்றார்.

சங்கர், மனோ மாஸ்டர் ஆகிய இருவருடன், தினேஷையும் அழைத்து செல்லுமாறு பிரபாகரன் கூறினார். இந்த தினேஷ், தமிழ்ச்செல்வன் அல்ல. (தமிழ்ச்செல்வனின் ஆரம்பகால பெயரும் தினேஷ்) இவர் வேறு. அப்போது சென்னையில் பிரபாகரனின் கம்யூனிகேஷன் தொடர்பாளராக இருந்தவர் இந்த தினேஷ்.

ஒரு காரியத்துக்கு ஒருவரை அனுப்பினால், தமது நம்பிக்கைக்குரிய மற்றொருவரையும் சேர்த்து அனுப்புவது பிரபாகரனின் வழக்கம். அந்த வகையில் தினேஷூம் இதில் இணைக்கப்பட்டார்.

கே.பி. தம்மிடம் இருந்த கப்பல் ஒன்றை சிங்கப்பூரில் இருந்து அனுப்பினார். அந்தக் கப்பல் செங்கடல் நோக்கிச் செல்லுமுன், இந்திய கடல் பகுதிக்குள் வந்தது. சென்னையில் இருந்து சங்கர், மனோ மாஸ்டர், தினேஷ் ஆகியோர் ஒரு படகு மூலமாக சென்று இந்தக் கப்பலில் ஏறிக் கொண்டனர். கப்பலில் சுமார் 20 விடுதலைப்புலிகள், மற்றும் மாலுமிகள் இருந்தனர்.

கப்பல், செங்கடலை நோக்கி செல்ல துவங்கியது.

தொடரும்...
Source
nadunadapu 

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :