எல்லாம் விதிப்படியா?:
விதி என்கிற
தத்துவத்தைக் கூறும் போது சிலர் சொல்வதுண்டு ‘’எல்லாம் விதியின் படிதானே நடக்கும்
அப்புறம் ஏன் மனிதன் நல்வினையாற்றுவதோ, பக்தியை செய்வதோ, ஞானம்பெற முயலுவதோ தேவை?
அது பாட்டுக்கு விதி நடந்து விட்டுப் போகட்டுமே ‘’ என்பர். இதுவும் மேலோட்டமாகப் பார்த்தால்
உண்மையாகத்தானே தோன்றுகிறது?
உண்மைதான் என்ன? சரி
இன்னொரு கூற்றும் உள்ளது விதியை மதியால் வெல்லலாம் என்று. இதென்ன புதிதாக
இருக்கிறது எல்லாம் விதிப்படியே நடக்கும் என்றால் எப்படி மதியால் அதை வெல்லலாம்
என்றும் தோன்றும். இதற்கு சில கதை உதாரணமாக சத்தியவான்-சாவித்திரி கதையையும்
என்றும் பதினாறான மார்க்கண்டேயனையும் கொள்ளலாம். அவர்களிருவருமே மதியால் விதியை
வென்றவர்கள். சாவித்திரி யமதர்மனை வாக்குக் கொடுக்க வைத்தும் மார்க்கண்டேயன்
சிவபெருமான் லிங்கத்தைக் கட்டிப் பிடித்தும் விதியை வென்றவர்கள். ஆனால் இதெல்லாம்
நடக்குமா என்றும் நமக்கு தோன்றலாம். அதனால் இதனை வேறு வகையில் சொல்ல விழைகிறேன்.
உண்மையில்
மனிதனின் வாழ்க்கைப் பயணம் விதியினால் மட்டுமே நடைபெறக் கூடிய ஒன்றா? கண்டிப்பாக
இல்லை. அதற்கு மதியும் கூடத்தான் காரணமாக இருக்கிறது. இதனையே இன்னொரு வழியில்
விதியும் மதியும் சேர்ந்ததாக இருக்கிறதோ என்றும் சொல்லலாம். இதையே இன்னும் வேறொரு
வழியில் வாழ்க்கை விதியின் வழியே என்றாலும் கூட மதியின் செயல்பாட்டால் அந்த
விதியின் போக்கை அவ்வப்போது சற்று மாற்றியும் கொள்ளலாம் என்றும் கூடக் கொள்ளலாம். இப்போது கடைசியாகக்
கூறியதுதான் உண்மை. மதியின் செயல்பாட்டால் நம்முடைய விதியின் போக்கை ஓரளவுக்குக்
கட்டுப்படுத்திக் கொண்டு செல்ல நம்மால் கண்டிப்பாக இயலும்.
இந்த இடத்தில் விதி
என்பதை நம்முடைய முற்பிறவி வினைப்பயன் என்று நாம் வைத்துக் கொள்ளலாம்.
அப்படியானால் அது இப்பிறவியில் நாம் செய்யும் காரியங்கள் எதற்கும் தொடர்பில்லாதது
என்கிற பொருள் இங்கு வருகிறது. இன்னொன்று நம்முடைய விதியை நாமே எழுதிக்
கொள்வதில்லை. அது முற்பிறவியின் வினைகளை வைத்து யாராலோ எழுதப்படுகிறது .
அப்படியிருக்க எப்படி அதனை மதியின் மூலமாக மாற்ற இயலும்? விதி என்பது எப்படியிருந்தாலும்
முன்கூட்டியே எழுதப்பட்ட ஒன்றுதானே அப்படியிருக்க எப்படி அதனை மதியினால் மாற்ற
முடியும்? அதே விதிதானே நம்முடைய மதியினுடைய இயக்கத்தையும் நிர்ணயிக்க முடியும் ?
இந்த மதி இப்படிதான் இயங்க வேண்டும் என்கிற செய்தியும்தானே விதியின் மூலம் எழுதப்
பட்டிருக்கும்? பின் மதியினால் எப்படி அதன் போக்கை மாற்றிக் கொள்ள முடியும் ?
இதைப் பற்றி உணர்ந்து
கொள்ள மதி என்றால் என்ன என்றும் அதன் இயக்கம் குறித்தும் நாம் தெரிந்து கொண்டால்
புரியும். அதைப் பற்றி அடுத்த பதிவில் கூற விழைகிறேன்.
ஆக்கம்: துரோணாச்சாரியார்