Sunday, July 12, 2015

Keerthivasan

திருமழபாடி – திருநாவுக்கரசர் தேவாரம் – பாடல் 1 முதல் 3 வரை

திருமழபாடி திருத்தலத்து இறைவன் மீது திருநாவுக்கரசு ஸ்வாமிகள் பாடிய பதிகப் பாடல்களை ஒவ்வொன்றாக அர்த்தத்துடன் அனுபவிப்போம்.


பாடல் 1.

நீறேறு திருமேனி யுடையான் கண்டாய்
நெற்றிமே லொற்றைக்கண் நிறைந்தான் கண்டாய்
கூறாக உமைபாகங் கொண்டான் கண்டாய்
கொடியவிட முண்டிருண்ட கண்டன் கண்டாய்
ஏறேறி யெங்குந் திரிவான் கண்டாய்
ஏழுலகும் ஏழ்மலையு மானான் கண்டாய்
மாறானார் தம்அரணம் அட்டான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
பொழிப்புரை :
மழபாடியில் உறையும் அழகன் திருநீறணிந்த அழகிய திருமேனியன். நெற்றிக்கண்ணன். பார்வதி பாகன். விடமுண்ட நீலகண்டன். காளையை இவர்ந்து எங்கும் திரிபவன். ஏழுலகமும் ஏழ்மலையும் ஆயவன். பகைவருடைய மும்மதில்களையும் அழித்தவன்


பாடல் எண் : 2

கொக்கிறகு சென்னி யுடையான் கண்டாய்
கொல்லை விடையேறுங் கூத்தன் கண்டாய்
அக்கரைமே லாட லுடையான் கண்டாய்
அனலங்கை யேந்திய ஆதி கண்டாய்
அக்கோ டரவ மணிந்தான் கண்டாய்
அடியார்கட் காரமுத மானான் கண்டாய்
மற்றிருந்த கங்கைச் சடையான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
பொழிப்புரை :
மழபாடி மன்னும் மணாளன் சென்னியில் கொக்கு இறகை அணிந்தவன். முல்லை நிலக்கடவுளாகிய திருமாலாகிய காளையை இவர்பவன். கூத்தாடுபவன். தான் கூத்தாடும்போது இடையில் கட்டிய சங்குமணி ஆடுதலைஉடையவன். தீயினை உள்ளங்கையில் ஏந்திய முதற்கடவுள். எலும்பையும், பாம்பையும் அணிந்தவன். அடியவர்களுக்குக் கிட்டுதற்கரிய அமுதமானவன். கங்கை அடங்கியிருக்கும் சடையை உடையவன்.


பாடல் எண் : 3

நெற்றித் தனிக்கண் ணுடையான் கண்டாய்
நேரிழையோர் பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றிப்பாம் பாட்டும் படிறன் கண்டாய்
பல்லூர் பலிதேர் பரமன் கண்டாய்
செற்றார் புரமூன்றுஞ் செற்றான் கண்டாய்
செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மற்றொரு குற்ற மிலாதான் கண்டாய்
மழபாடி மன்னு மணாளன் றானே.
பொழிப்புரை :
மழபாடி மன்னும் மணாளன், நெற்றிமேல் ஒற்றைக்கண்ணை உடையவன். பார்வதி பாகன். பாம்பைப் பிடித்து ஆட்டும் வஞ்சகன். பல ஊர்களிலும் பிச்சை எடுக்கும் மேம்பட்டவன். பகைவர் மும்மதில்களையும் அழித்தவன். பிறையைச் சடையில் அணிந்தவன். எல்லா நற்குணங்களுக்கும் இருப்பிடமாகிய அவன் குற்றமே இல்லாதவன்.

தொகுப்பு: Arul Sivasankaran

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :