Sunday, July 12, 2015

Keerthivasan

திருமழபாடி – திருநாவுக்கரசர் தேவாரம் – பாடல் 4 மற்றும் 5

திருமழபாடி திருத்தலத்து இறைவன் மீது திருநாவுக்கரசு ஸ்வாமிகள் பாடிய பதிகப் பாடல்களை ஒவ்வொன்றாக அர்த்தத்துடன் அனுபவிப்போம்.

 பாடல் எண் : 4

அலையார்ந்த புனற்கங்கைச் சடையான் கண்டாய்
    அண்டத்துக் கப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலையான கூற்றங் குமைத்தான் கண்டாய்
    கொல்வேங்கைத் தோலொன் றுடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய்
    செழுமா மதிசென்னி வைத்தான் கண்டாய்
மலையார் மடந்தை மணாளன் கண்டாய்
    மழபாடி மன்னு மணாளன் றானே.
பொழிப்புரை :
மழபாடி மன்னும் மணாளன், அலைமிக்க கங்கையைச் சடையில் ஏற்றவன். உலகங்களுக்கு எல்லாம் புறத்தவனாக நிற்பவன். கொலைத் தொழிலைச் செய்யும் கூற்றுவனைத் தண்டித்தவன். தன்னால் கொல்லப்பட்ட வேங்கைத்தோலை ஆடையாக உடுத்தவன். வில்லால் முப்புரங்களை அழித்தவன். பிறையைச் சடையில் வைத்தவன். பார்வதியின் தலைவன்.



பாடல் எண் : 5

உலந்தார்தம் அங்கம் அணிந்தான் கண்டாய்
    உவகையோ டின்னருள்கள் செய்தான் கண்டாய்
நலந்திகழுங் கொன்றைச் சடையான் கண்டாய்
    நால்வேதம் ஆறங்க மானான் கண்டாய்
உலந்தார் தலைகலனாக் கொண்டான் கண்டாய்
    உம்பரார் தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்தார் திருவடியென் தலைமேல் வைத்த
    மழபாடி மன்னு மணாளன் றானே.
பொழிப்புரை :
மழபாடி மன்னும் மணாளன் இறந்தவர்களுடைய எலும்புகளை அணிந்தவன். மகிழ்வோடு பிறருக்கு அருள் செய்பவன். அழகு விளங்கும் சடையில் கொன்றையை அணிந்தவன். நான்கு வேதங்களும் ஆறு அங்கங்களும் ஆகியவன். இறந்தவர்களின் தலைகளை அணிகலனாக உடையவன். தேவர்களுக்குத் தலைவன். எங்கும் நிறைந்த தன் திருவடிகளை என் தலைமேல் வைத்தவன்.

தொகுப்பு: Arul Sivasankaran

Keerthivasan

About Keerthivasan -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :