மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள் –
தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவன் ஒரு முனிவருக்கு தர்மம் என்றால் என்ன என்பது பற்றி உபதேசிக்கிறான்.
அந்த முனிவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார். மரத்தின் மீது இருந்த ஒரு கொக்கு, அவர் மீது அசிங்கம் செய்து விட்டது. அவர் கோபத்துடன் நிமிர்ந்து கொக்கைப் பார்த்தார். அது சாம்பலாகி விட்டது.
அங்கிருந்து புறப்பட்டு, ஒரு வீட்டுக்குச் சென்று அவர் பிட்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி, வெளியே வர நேரமாகி விட்டது. முனிவருக்குக் கோபம் வந்தது. அந்தப் பெண் வெளியே வந்தபோது, ‘என்ன செய்வேன் தெரியுமா?’ என்றார்.
அந்தப் பெண், அந்த முனிவரைப் பார்த்து ‘என்னை என்ன கொக்கு என்று நினைத்தீர்களா?’ என்று கேட்டாள்.
இவருக்கு ஒரே ஆச்சர்யம் – எங்கோ நடந்த நிகழ்ச்சி அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று. ‘அது எப்படி உனக்குத் தெரியும்?’ என்று கேட்கிறார்.அந்தப் பெண்மணி ‘எனக்கு எல்லாமே தெரிகிறது. நீங்கள் கொக்கை எரித்து சாம்பலாக்கியது போல், என்னையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது’ என்று கூறுகிறாள்.
அவளுக்கு எப்படி அந்த சக்தி வந்தது….?
அவளுடைய பதி பக்திதான் காரணம். கணவனுக்குப் பணிவிடை செய்வதை தனது தர்மமாக ஏற்றுக் கொண்டு, அதை விடாமல் காப்பாற்றி வந்ததால், அவளுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு வந்தது.
தன்னுடைய தர்மத்தை விடாமல் காப்பாற்றியதால் கிடைத்த மேன்மை இது.
‘தர்மத்தைப் பற்றி எனக்கு உபதேசம் செய்’ என்று அந்தப் பெண்மணியிடம் முனிவர் கேட்கிறார்.
அவளோ, ‘நீங்கள் என்னிடம் கேட்டுப் பயனில்லை. தர்மவியாதனிடம் சென்று கேளுங்கள்’ என்று சொல்கிறாள்.
முனிவரும் தர்மவியாதன் யார், எங்கே இருக்கிறான் என்று விசாரித்துத் தேடிச் சென்று, அவனை அடைகிறார். பார்த்தால், அவன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவனிடம் முனிவர், தர்மத்தைப் பற்றிய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு, ‘உனக்கு எப்படி இந்த சக்தி வந்தது’ என்று கேட்கிறார்.அவன் ‘என் தாய் தந்தையருக்கு நான் விடாமல் சிச்ருஷை (பணிவிடை) செய்து வருகிறேன். இந்த தர்மத்தை தொடர்ந்து மனமாரக் காப்பாற்றி வந்ததால், எனக்குக் கிடைத்த உயர்வு இது’ என்று சொல்கிறான்.
பெற்றோருக்கு பணிவிடை செய்வதை தனது கடமையாக ஏற்றிருந்தான் அவன். அது அவனுடைய தர்மமாகியது.
இப்படி தர்மம் என்பதில் பலவித அம்சங்கள் இருக்கின்றன.
ராமர், ஸீதையை நடத்திய விதம் தர்மமா, அதர்மமா? என்ற கேள்வி, அன்றிலிருந்து இன்று வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. நெருப்பிலே விழச் செய்து, அதன் பிறகும் யாரோ சொன்னதற்காக ஊரை விட்டே விரட்டி, இறுதியில் வால்மீகி முனிவரே வந்து ‘இவள் புனிதமானவள்’ என்று கூறிய பிறகும், ‘சபையினருக்காக ஒருமுறை உன்னுடைய புனிதத் தன்மையை நிரூபித்து விடு’ என்று ராமர் சொல்கிறார். அப்போதுதான் ஸீதை பூமிக்குள்ளே சென்று விடுகிறாள்.
ராமருடைய இல்லற தர்மம் என்று பார்த்தால், அவர் செய்தது அதர்மம்தான், அதில் சந்தேகமே கிடையாது. ஒரு மனைவியை இவ்வளவு கொடூரமாக நடத்தியதை தர்மம் என்று ஏற்க முடியாது – இதை ‘இல்லற தர்மம்’ என்று பார்க்கும்போது.
ஆனால் இதையே ‘ராஜ தர்மம்’ என்று அணுகினால், அது மிகவும் சிறப்பு வாய்ந்த செயலாகத் தெரிகிறது. சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். மன்னனைப் பற்றி இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டால், அதற்குப் பிறகு அந்த ராஜாங்கத்திற்கு மரியாதை கிடையாது. அந்த ஆட்சியின் அதிகாரம் எடுபடாது.
அதனால் அப்படிப்பட்ட ஒரு சிறிய சந்தேகம் கூட ஆட்சியைப் பற்றி இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஸீதை வெளியே அனுப்பப்பட்டாள். அங்கே ராஜ தர்மம் மேலோங்கி நின்றது.
இப்படி முரண்பாடாகத் தெரிகிற பல விளக்கங்கள் தர்மத்திற்கு உண்டு.இப்போது யுத்தம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் – அது தர்மமா, அதர்மமா? ஆயிரக்கணக்கான பேரைக் கொல்கிறோம். சாத்திரத்தில் ‘அஹிம்ஸா பரமோ தர்ம:’ என்று கூறப்பட்டிருக்கிறது.எல்லா தர்மங்களைக் காட்டிலும், உயர்ந்த தர்மம் அஹிம்ஸை. ஆனால் யுத்தம் என்றாலே ஹிம்ஸைதான். ஹிம்ஸை இல்லாத யுத்தமே கிடையாது. அது தர்மமா, அதர்மமா? நாட்டைக் காப்பாற்ற ஓர் அரசன் மேற்கொள்கிற யுத்தம் ராஜ தர்மம். ஆகையால் அது தர்மமே.
கேள்வி : தர்மம் என்பது இப்படி ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறதே! என் தர்மம் ஒன்று, உங்கள் தர்மம் ஒன்று என்ற நிலை பல நேரங்களில் வரும் போல இருக்கிறதே!
சோ: வரலாம். அப்படி வரும்போது, சிக்கல் எழத்தான் செய்யும். ஒரு விளக்கம் இங்கே குறிப்பிடத்தக்கது:
ந தர்மா அதர்மௌ சரதி ஆவம் ஸ்வ இதிஇது ‘ஆபஸ்தம்ப சூத்திரத்தில்’ வருவது.
ந தேவ கந்தர்வோ ந பித்ருபி:
இத்யாசக்ஷதேயம் தர்மோ அயம் அதர்ம இதி
யத்யார்யா க்ரியமாணம் ப்ரசம்ஸந்தி ஸதர்மோ
யத்தர்ஹந்தே ஸ அதர்ம:
ஆபஸ்தம்ப சூத்திரம் சொல்வது –